தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் “சிதைந்து போகின்ற தமிழ் தேசியமும் சிந்திக்காத தலைமைகளும்” என்ற தலைப்பில் 18.12.2021 (சனிக்கிழமை) அன்று கருத்தாய்வு ஒன்று யாழ்.பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது மண்டபத்தில் இடம்பெற்றது.
இக்கருத்தாய்வில் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம், திரு. நிலாந்தன், திரு.ந.வித்தியாதரன், திரு.ம.செல்வன், பா.உ. எம்.ஏ.சுமந்திரன், பா.உ. த.சித்தார்த்தன், மு.பா.உ.எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் திரு.க. அருந்தவபாலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
முன்னுரையை அருட்தந்தை ஜெயபாலன் அடிகளார் வழங்கினார். கருத்தாய்வை வி.எஸ்.சிவகரன் நெறிப்படுத்தினார். இந்தக் கருத்தாய்வில் திரு சுமந்திரன், நா.உ ஆற்றிய உரையின் முதல் பாகம் எழுத்து வடிவில் கீழே தரப்பட்டுள்ளது.
சுமந்திரன் நா.உ: மேடையில் என்னுடன் கூட அமர்ந்திருக்கும் நண்பர்கள் எல்லோருக்கும் மற்றும் நீண்ட நேரம் உரைகளை செவிமடுத்துக் கொண்டிருக்கும் ஆர்வலர் அனைவருக்கும் வணக்கம்!
திரு. சிவாஜிலிங்கம் ஒன்றை ஞாபகப்படுத்தினார். 1949-12-18 தமிழரசுக் கட்சி தாபிக்கப்பட்ட நாள். இன்று 2021-12-18 தமிழரசுக் கட்சியின் 72 ஆண்டு வயதாகிறது. தமிழ்த் தேசியத்தின் பிதாமகன் தந்தை செல்வா என்று அவர் சொன்னார். அதில் ஒரு பெரிய உண்மை இருக்கிறது.
ஐந்நூறு ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு நாங்கள் தேசம் என்கின்ற உணர்வை- ஒரு விவரிப்பை – ஒரு கொள்கை நிலைப்பாட்டை மீளவும் உருவாக்கியது இலங்கை தமிழரசுக் கட்சி. 1949 ஆம் ஆண்டிலே தமிழரசுக் கட்சியை உருவாக்கிய போது தந்தை செல்வா ஆற்றிய சொற்பொழிவு பின்னர் 1951 இல் திருமலை மாநாட்டில் கட்சித் தீர்மானமாக அறிவிக்கப்பட்டது. அந்த நிலைப்பாட்டிலேயே தொடர்ச்சியாகப் பயணித்து வந்திருகிறோம். அந் நிலைப்பாட்டுக்கு எங்களுடைய மக்கள் ஆதரவு 1956 இல் இருந்து தொடர்ச்சியாக இன்று வரை இருக்கிறது.
இடையில் ஒரு காலத்தில் அந்நிலைப்பாடு இன்னும் தீவிரம் பெற்று தனி நாடாக ஆக வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருந்தது. ஆனால் சமஸ்டிக் கட்டமைப்பிலே எங்களுடைய பாரம்பரிய பிரதேசங்களிலே எம்மை நாம் நாமே ஆளக்கூடிய ஓர் ஆட்சி முறை அமைக்கப்பட வேண்டும் என்கின்ற கொள்கைக்குக் குறைவாக எந்தக் காலத்திலேயும் எங்களுடைய மக்கள் வாக்களிக்கவில்லை.
அதுவே எங்களது நிலைப்பாடாக தொடர்ச்சியாக இருந்திருக்கிறது. யுத்தம் முடிவடைந்த பிறகு 2010 இல் இருந்து 2020 வரை உள்ள இடைப்பட்ட காலத்திலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் முன்பாக முன்வைத்த கொள்கை நிலைப்பாடு அதுவாக தான் இருந்திருக்கிறது. தொடர்ச்சியாகச் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) சந்தித்த அனைத்துத் தேர்தல்களிலேயும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக முன்வைத்த நிலைப்பாடும் அதுவாகத்தான் இருந்திருக்கிறது. அந்தத் தேர்தல் விஞ்ஞாபனங்கள் அனைத்தையும் வரைந்ததிலே ஒரு பங்காற்றிய எனக்கு அது நன்றாகத் தெரியும்.
சென்ற ஆண்டு நாம் மக்கள் முன்பாக வைத்த நிலைப்பாட்டிலேயும் கூட எமது அரசியல் நிலைப்பாடு என்று தலையங்கம் இட்டுத் தெட்டத் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளே பல கட்சிகள் உள்ளன. வெவ்வேறு கால கட்டத்தில் உள்ளே வருவார்கள், பின்னர் வெளியே போவார்கள். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு – யுத்தத்துக்குப் பின்னாலான காலத்திலே – சமஸ்டிக் கட்டமைப்பிலான ஓர் ஆட்சி முறை என்பதிலே எந்தவித சலனமும் இருக்கவில்லை. அப்படியாகவேதான் சொல்லப்பட்டிருக்கிறது.
பலர் பல சரித்திரங்களைச் சொன்னார்கள். வேறு சிலர் இப்படி இப்படியாக இருக்க வேண்டும் என்று சொல்லி அதெல்லாம் இல்லை என்ற தீர்மானத்தைத் தாமாக அறிவித்து விட்டு அமர்ந்திருக்கிறார்கள். அவை எல்லாம் இல்லை என்று அவர்களுக்கு எப்படித் தெரியும் என்று எனக்குத் தெரியாது.
ஒரு இராசதந்திரப் பொறிமுறை எங்களிடையே இல்லை – ஒரு திட்டம் இல்லை என்று அவர்கள் சொல்வதிலே ஒரு நியாயம் இருக்கலாம். ஏனெனில், அது அவர்களுக்குத் தெரியாது. இது தான் எங்களடைய இராசதந்திரத் திட்டம் என்று இந்தக் கூட்டத்தில் வைத்து பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்களோ எனக்குத் தெரியாது. அப்படியாக அறிவிக்க முடியாது என்பது அவர்களுக்கு -அரசியல் விஞ்ஞானிகளுக்குத் – தெரிந்திருக்க வேண்டும்.
இந்த பத்தி எழுத்தாளர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ச்சியாக எழுதிக் கொண்டு இருப்பார்கள். இது இல்லை – அது இல்லை- இந்தியாவை புறம் தள்ளிவிட்டு அமெரிக்காவுக்குப் போய் விட்டார்கள்! யார் அய்யா சொன்னது இந்தியாவைப் புறம் தள்ளி, அமெரிக்காவுக்கு போய்விட்டோம் என்று? கற்பனையிலே பலர் எழுதிக் கொண்டிருப்பார்கள். கற்பனையிலே பலர் குழப்பிக் கொண்டிருப்பார்கள்.
2011 ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்க இராசாங்க திணைக்களத்தால் அழைக்கப்பட்டு – நாங்கள் அங்கு சென்று பேசியதுதான் அதன் பின்னர் இவ்வளவு காலமும் ஜெனிவா தீர்மானங்களுக்கு அடித்தளம் என்பதை சிவாஜிலிங்கம் தெளிவாகச் சொன்னார். அப்போது நாங்கள் இந்தியாவை புறந்தள்ளி விட்டு அமெரிக்காவுக்கு ஏன் போனீர்கள் என்று யாராவது சொன்னார்களா? அப்பொழுது இருந்ததை விட இப்பொழுது கூடுதலாக இந்தியாவின் இணக்கப்பாட்டுடன் தான் இவை எல்லாம் நடைபெறுகிறது. அதை மட்டும்தான் நான் உங்களுக்குச் சொல்லலாம்.
அமெரிக்காவில் கூட ஒவ்வொரு சந்திப்பிற்குப் பிறகும் அல்லது ஒவ்வொரு நாளுக்குப் பிறகும் இந்தியாவுடன் எமது உரையாடல் இருந்திருக்கிறது. வோஷிங்டனுக்கும் நியூ டெல்லிக்கும் இடையிலே இது சம்பந்தமாக தொடர்ச்சியான உரையாடல் நடைபெறுகிறது. அது தொடர்பில் நீங்கள் எவரும் பதைபதைக்க வேண்டிய அவசியம் எதுவும் கிடையாது. அது எல்லாம் ஒழுங்காகத்தான் நடக்கிறது.
இதற்குள்ளே சிலர் அப்படி வெட்டி ஓடுகிற நோக்கம். “அய்யய்யோ இவை இந்தியாவை கை விட்டிட்டினம்! நாங்கள் தான் இந்தியாவுடன் நிற்கப் போறோம்” என்கிறார்கள். அதற்கு ஒரு கூட்டணி! அதற்கு செய்தியாளர் சந்திப்புகள்! இந்த இராசதந்திர அணுகுமுறைகள் இந்தக் காலகட்டத்திலே எப்பயாக இருக்க வேண்டும் என்பதை சிந்தித்து அறிவதற்கு அவ்வளவு புத்தி அவசியம் இல்லை.
இன்றைக்குத்தான் “குவாட்” (SQUAD) என்ற நான்கு நாடுகளின் அமைப்பு உருவாகி இருக்கிறது. அமெரிக்காவம், இந்தியாவும், யப்பானும் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் நான்கும் சேர்ந்து இயங்குவது எதற்காக? சேர்ந்து இயங்குவது எதற்காக? 1987 இல் இந்திய – இலங்கை ஒப்பந்தம் செய்யப்பட்ட போது அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே கூட பனிப்போர் இருந்தது.
திரு. சம்பந்தன் நாடாளுமன்றில் ஆற்றிய நீண்ட பேச்சு ஒன்று அந்தக் காலத்தில் செய்தது. அமெரிக்காவுக்கு திருகோணமலை எண்ணெய்க் குதங்களை அமெரிக்காவுக்குக் கொடுக்க வேண்டாம் – அவற்றை இந்தியாவுக்குக் கொடுங்கள் என்று தெட்டத் தெளிவாகக் கூறியிருந்தார். அப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டியதாக இருந்தது. இன்று அப்படி ஒரு நிலைப்பாடு இல்லை. அதைப் பேராசிரியர் கணேசலிங்கம் அவர்களும் சொன்னார். அவர்களுடைய எண்ணங்கள் ஒன்றாக இருக்கிற இந்தச் சூழ்நிலையிலே நாங்கள் இதனை முன்நகர்த்த வேண்டும். (தொடரும்)