ஐக்கிய இராச்சியத்தினை மையமாகக் கொண்டு இயங்கிவரும் கலாநிதி இரத்னம் நித்தியானந்தனின் தன்னார்வ தொண்டு நிறுவனமான ரட்ணம் மன்றத்தின் இணை அனுசரணையில் தமிழ் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்கான செயற்பாடுகளில் ஒன்றான, பாடசாலைகளுக்கு திறன் பலகை (Smart Boards ) வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் கொழும்பு றோயல் கல்லூ ரிக்கு அண்மையில் இரண்டு திறன் பலகைகள் (Smart Boards) வழங்கப்பட்டன.
திறன் வகுப்பறையை மேம்படுத்தும் முகமாகவும் வினைத்திறனாக முன்னெடுக்கும் பொருட்டும் இச்செயற்பாட்டுக்கு டாக்டர் ரேவதி சத்தியநாராயணா வினால் ஒரு திறன் பலகையையும் கேகாலை மாவட்டத்தின் தமிழ்க் கல்வியின் அபிவிருத்திக்காக கால் நூற்றாண்டு காலமாக பெரும் பணியாற்றிய சென்.மேரிஸ் கல்லூரியின் முன்னாள் அதி பரும் அக் கல்லூரியை அபிவிருத்தி செய்து க.பொ.த. உயர் வகுப்புக்களை ஆரம்பித்த வருமான மாத்தளையைச் சேர்ந்த மரதன் கிருஷ்ணனின் மூத்த புதல்வரும் றோயல் கல்லூரியின் பழைய மாணவருமான கிருஷ்ணன் திவாகரனின் நிதிப் பங்களிப்பினாலும் வழங்கப்பட்டது.
நிகழ்வில், கலாநிதி நித்தியானந்தனின் வேண்டுகோளுக்கிணங்க, றோயல் கல்லூரியின் பழைய மாணவரும் அவுஸ்திரேலியாவுக்கான முன்னாள் உயர்ஸ்தானி கரும் George Stuart குழுமத்தின் முன்னாள் தலைவருமான சோமசுந்தரம் ஸ்கந்தகுமார் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பெயர்ப் பலகையை திரைநீக்கம் செய்து வைத்தார்.
இங்கு உரையாற்றிய அவர்,
‘மாணவர்கள் பாடசாலைக்கும் சமுதாயத்துக்கும் றோயல் கல்லூரியின் விழுமியங்கள் சார்ந்து நின்று எப்போதும் பெருமை தேடித்தர வேண்டும். கால சூழலுக்கேற்ப தம்மை இசைவாக்கிக் கொள்ள வேண்டும். மாணவர்களின் நல்லொழுக்கம் மேம்பட வேண்டியே பழைய மாணவர்களும் பாடசாலை சமூகமும் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றன. மாணவர்கள் தங்களுடைய வாழ்நாளில் மற்றவர்கள் மேற்கொள்ளும் நன்மைகளுக்கு பொறுப்புக் கூறவேண்டியவர்களாக இருக்கின்றார்கள். அவ்வாறே தம் வாழ்நாள் முழுவதும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டியவர்களாகவும் இருக்கின்றார்கள். றோயல் கல்லூரியின் ஒழுக்கத்தில் பொறுப்புணர்வும் பொறுப்புக்கூறலும் இன்றியமையாதனவாக காணப்படுகின்றன.
வளர்ந்து வரும் இளம் மாணவர்களாகிய நீங்கள் இவற்றை உங்கள் வாழ்வில் கடைப்பிடித்து ஒழுக வேண்டும் என்பதே எங்களது அவாவாக காணப்படுகின்றது’ என்று தனது உரையில் குறிப்பிட்டார்.
இராணுவ தலைமையக திட்டமிடல் பணிப்பாளர் பிரிகேடியர். ஷெவந் குலதுங்க, கல்லூரியின் அதிபர் எம். வி.எஸ்.குணதிலக்க, திருமதி. இசிபாலி லியனகே, திருமதி. நர்மதா ஆகியோருடன் பாடசாலை சமூகத்தினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.