(மன்னார் நிருபர்)
(03-02-2022)
06 மாகாணங்களைச் சேர்ந்த 47 கமநலச் சேவை நிலையங்களுக்கான விவசாய இயந்திரங்களைப் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது.
இதற்காகச் செலவிடப்பட்டுள்ள மொத்தத் தொகை 250 மில்லியன் ரூபாய்களாகும்.
பசுமை விவசாயத்துக்காக விவசாயிகளை ஊக்குவித்தல் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்தும் வகையில் செயற்படுத்தப்படும் “காலநிலைக்கு உகந்த நீர்ப்பாசனத் திட்டம்” ஆகியவற்றின் கீழ் – கமநலச் சேவை நிலையங்களுக்கு இந்த விவசாய இயந்திரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
அறுவடை செய்யும் இயந்திரங்கள், களை பறித்தல் இயந்திரங்கள், நாற்று நடும் இயந்திரங்கள், 45 குதிரை வலுவுடைய உழவு இயந்திரங்கள் உள்ளிட்ட 7 வகையான இயந்திரங்களே இவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டன.
வடக்கு, வடமத்தி, கிழக்கு, வடமேல், ஊவா மற்றும் தென் மாகாணங்களுக்கு உரித்தான 11 மாவட்டங்களில் அமைந்துள்ள 47 கமநலச் சேவை நிலையங்களுக்கே இந்த இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே, இராஜாங்க அமைச்சர் ஷஷீந்திர ராஜபக்க்ஷ, செயலாளர் காமினி செனரத், விவசாயத்துறை அமைச்சின் செயலாளர் டீ. எம். எல். பண்டாரநாயக்க ஆகியோரும் விவசாய அமைப்புகளின் உறுப்பினர்களும், இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.