(மன்னார் நிருபர்)
(05-02-2022)
இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்ட 43 ராமேஸ்வரம் மீனவர்களை உடனடியாக தாயகம் திருப்பி அனுப்பி வைக்க வலியுறுத்தி இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்களின் உறவினர்கள் ராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தை இன்று சனிக்கிழமை (5) மதியம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 43 மீனவர்களையும் அவர்களது 6 விசைப் படகுகளையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கடந்த 26 ஆம் திகதி ராமேஸ்வரம் மீனவர் 43 பேர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீனவர்கள் 12 பேர் என மொத்தம் 55 மீனவர்களின் வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது வழக்கை விசாரித்த நீதவான் மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
விடுதலை செய்யப்பட்ட ராமேஸ்வரம் மற்றும் ஜெகதாபட்டிணம் மீனவர்கள் 55 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் 46 மீனவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் 46 மீனவர்களை சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்டம் இயக்கச்சியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு இலங்கையில் தங்க வைக்கப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக தாயகம் திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்யக் கோரி இலங்கையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்களின் உறவினர்கள் இன்று சனிக்கிழமை (5) ராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பின்னர் வட்டாச்சியர் ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர் ளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் எதிர்வரும் திங்கட்கிழமை க்குள் இலங்கையில் உள்ள மீனவர்கள் தாயகம் திருப்பி அனுப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
இதையடுத்து திங்கட்கிழமை மீனவர்கள் தாயகம் திரும்பி வர விட்டால் திங்கட்கிழமை முதல் தொடர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களின் உறவுகள் தெரிவித்தனர்.