கனிய மணல் அகழ்வுக்கான உபகரணங்களுடன் மன்னாரில் இருந்து செல்வதாக அவுஸ்திரேலிய கனிய மண் அகழ்வு நிறுவனத்தின் இலங்கைக்கான பொறுப்பாளர் தெரிவிப்பு.
(மன்னார் நிருபர்)
(04-03-2022)
மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் கனிய மணல் அகழ்வின் முதற்கட்ட செயற்பாடான கனிய மணல் பரிசோதனை நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் குறிப்பாக தீவு பகுதியில் பல இடங்களில் கனிய மணல் அகழ்வு நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
குறித்த அகழ்வு நடவடிக்கை குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடல் மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் இன்றைய தின வெள்ளிக்கிழமை (4) காலை 10.30 மணியளவில் மன்னார் நகர சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
-இதன் போது கலந்து கொண்டவர்கள் ஒன்றிணைந்து மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் கனிய மணல் பரிசோதனை நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை முன் வைத்தனர்.
மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியா கனிய மணல் அகழ்வு நிறுவனத்தின் இலங்கைக்கான பொறுப்பாளர் சாலிய கலந்து கொண்டிருந்தார்.
குறித்த கலந்துரையாடலில் மன்னாரின் சுற்றாடலை பாதுகாக்கும் அமைப்பின் பிரதி நிதிகள்,உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள்,பொது மற்றும் தனியார் அமைப்புகளின் பிரதிநிதிகள்,மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
-இதன் போது மன்னார் மாவட்டத்தில் கனிய மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் மாவட்டத்தில் ஏற்படவுள்ள அபாய நிலை குறித்து ‘மன்னாரின் சுற்றாடலை பாதுகாக்கும் அமைப்பினால் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டதோடு,மாவட்டத்தில் கனிய மணல் அகழ்வினால் எதிர் வரும் காலங்களில் ஏற்படும் பாதிப்புகள் குறித்த முன் வைக்கப்பட்டது.
-இதன் போது கலந்து கொண்டவர்கள் மாவட்டத்தின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் கனிய மணல் அகழ்வின் முதற்கட்ட செயற்பாடான கனிய மணல் பரிசோதனை நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை கூட்டாக கோரிக்கை முன் வைத்தனர்.
-இதன் போது கருத்து தெரிவித்த அவுஸ்திரேலியா கனிய மணல் அகழ்வு நிறுவனத்தின் இலங்கைக்கான பொறுப்பாளர் சாலிய,,,
-மக்களின் பாதுகாப்பிற்கு தீங்கை ஏற்படுத்துகின்ற வகையில் குறித்த கனிய மணல் அகழ்வு இடம் பெறாது.உரிய சட்ட திட்டங்களுக்கு அமைவாகவே இடம்பெற்று வருகின்றது.
-எனவே மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் குறித்த அகழ்வு பணி இடம் பெறாது.எனவே அகழ்வு நடவடிக்கைகளுக்காக கொண்டு வந்த இயந்திரங்களை எடுத்துக் கொண்டு உடனடியாக மன்னாரை விட்டு செல்கின்றோம்.என தெரிவித்தார்.
-இதன் போது மன்னார் மாவட்ட மக்களின் சார்பாக கலந்து கொண்ட அனைத்து தரப்பினரும் கைகளை தட்டி உடனடியாக குறித்த நடவடிக்கையை முன்னெடுங்கள் என தெரிவித்தனர்.
-இந்த நிலையில் குறித்த கலந்துரையாடல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.