காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையிலான சரக்கு கப்பல் போக்குவரத்து காங்கேசன் துறைக்கும் இராமேஸ்வரம் மற்றும் பண்டிச்சேரி இடையிலான பயணிகள் படகு சேவை தொடர்பாக இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் கலந்தாலோசனை நடத்தினார்கள்.
இலங்கையின் பருத்தித்துறை மற்றும் பால்சேனை உட்பட வடக்கு, கிழக்கு பகுதிகளில் மீன்பிடித் துறைமுகங்களை அமைத்து தருவதற்கு ஏற்கனவே இந்தியா சம்மதம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இலங்கை கடல்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் (Problems of Srilanka) மற்றும் அவற்றை தீர்ப்பதற்கு இந்தியாவினால் மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் தொடர்பாக இரு நாடுகளும் கலந்தாலோசித்தன.
இரு நாட்டு அமைச்சர்களின் சந்திப்பின் போது, இந்திய கடல்தொழிலாளர் விவகாரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.
இந்திய-இலங்கை மீனவர்களுக்கு இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையில் கச்சதீவில் ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பு தொடர்பாக எடுத்துரைத்த இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அண்மையில் இடம்பெற்ற அதிகாரிகள் மட்டக் கலந்துரையாடலும் பயனுள்ளதாக அமைந்திருந்ததைச் சுட்டிக்காட்டினார்.
இதுபோன்ற பேச்சுவார்த்தைகள் மூலமாக, இரு நாடுகளும் அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வினை எட்ட முடியும் என இரண்டு நாடுகளின் அமைச்சர்களும் நம்பிக்கை தெரிவித்தனர்.
மேலும், இலங்கையின் வடகிழக்கு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய கடல்தொழில் மற்றும் நீர்வேளாண்மை தொடர்பான சுமார் 23 திட்டங்களைகளை இந்திய வெளியுறவு அமைச்சரிடம் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்தார். இந்த திட்டங்கள் தொடர்பான எதிர்பார்ப்புக்களையும் அவர் தெளிவுபடுத்தினார்.
வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கான கடன் திட்டத்தின் அடிப்படையில் 100 மில்லியன் பெறுமதியான மூலப் பொருட்கள் மற்றும் இயந்திர உபகரணங்கள்.
காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையிலான சரக்கு கப்பல் போக்குவரத்து.
காங்கேசன் துறைக்கும் இராமேஸ்வரம் மற்றும் பண்டிச்சேரி இடையிலான பயணிகள் படகு சேவை.
பலாலி – திருச்சி இடையிலான விமானப் போக்குவரத்து சேவை.
இலங்கையின் காரைநகரில் அமைந்துள்ள சீநோர் படகு கட்டும் தொழிற்சாலையை செயற்படுத்துவதற்கு இந்திய முதலீட்டாளர்களின் ஒத்துழைப்புக்களை பெறுவது
என பல திட்டங்கள், இலங்கை அரசின் சார்பில் முன்வைக்கப்பட்டன.
மேலும், அரசியல் ரீதியிலான தீர்வுகள் விவகாரத்தில், 13ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான மாகாணசபை முறைமையை முழுமையாக அமுல்ப்படுத்துவதில் இருந்து ஆரம்பித்து தமிழ் மக்களின் அரசியல் விருப்பங்களை அடைய முடியும் என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
கடந்த 30 வருடங்களுக்கும் அதிகமாக தான் வலியுறுத்தி வரும் இந்த நிலைப்பாட்டிற்கு, காலம் கடந்தாயினும் தமிழர் தரப்புக்கள் வந்திருப்பதை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விவகாரம், காணாமல் போன உறவுகளுக்கான பரிகாரம், மேம்பாடு, நல்வாழ்பு தொடர்பாக, இலங்கை அதிபர், பிரதமர் மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச உட்பட்ட சக அமைச்சர்கள் அகியோருடன் கலந்துரையாடி, தன்னால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள் தொடர்பாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் தெரிவித்தார்.