சுவாமி விபுலானந்தர் அவர்களை ‘முத்தமிழ் அறிஞர்’ என்ற வட்டத்திற்கு அடக்கி விடமுடியாது. அவரது இளவயதிலிருந்தே இறைவனின் ஆசியும் அருளும் பெற்ற ஒருவராக வாழ்ந்துள்ளார். அவர் விரும்பிய போதெல்லாம் அவருக்கு தேவையான பொருட்களை அவரை அறியாதவர்கள் பலர் கொண்டு வந்து கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார்கள். உதாரணமாக சில புத்தகங்களை அவர் வாசிக்க விரும்பிய போது அவை விபுலானந்தர் அடிகளாருக்கு எவ்வித தடையுமின்றி கிடைத்துள்ளன.
எனவே அந்த மகானின் 130வது பிறந்த நாளை உலகெங்கும் பலநாடுகளிலிருந்தும் அவரை மரியாதை செய்து நேசிப்பவர்களாகிய நாம் கொண்டாடி மகிழ்கின்றோம்.
இவ்வாறு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தொடக்கம் கனடா ஸ்காபுறோ நகரிலிருந்து விபுலானந்த அடிகளாரின் 130வது பிறந்த நாளை கொண்டாடும் வண்ணம் ‘சுவாமி விபுலானந்தர் கலை மன்றம்- கனடா ஏற்பாடு செய்த விழாவில் இணையவழி மூலம் உரையாற்றிய மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிஷன் அமைப்பின் பொறுப்பாளர்களில் ஒருவரான சுவாமி நீலமாதவானந்தா அவர்கள் சிறப்புரையாற்றிய போது தெரிவித்தார்.
சுவாமி விபுலானந்தர் கலை மன்றம்- கனடா அமைப்பின் தலைவர் வல் புருஷோத்தமன் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்த விழாவை மன்றத்தின் செயலாளர் நித்தி சிவானந்தராஜா சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்
திரு. திருமதி கோணேஸ்- கீதா தம்பதியினர் மங்கல விளக்கேற்றினர். திருவாளர் விசுவலிங்கம் கணபதிப்பிள்ளை சுதர்ஷன் பத்மநாதன் ஆகிய இருவரும் விபுலானந்தர் அடிகளாரின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்தார்கள்.
தொடர்ந்து தலைவர் உரை இடம்டபெற்றது. அவரே வரவேற்புரையையும் ஆற்றினார்.
சங்கீத பூசணம் திருமதி குலநாயகி விவேகானந்தன் அவர்கள் விபுலானந்தர் அடிகளாரின் புகழ்பாடும் பாடல்களை இசையோடு பாடி அனைவரையும் மகிழ்வித்தார்.
தொடர்ந்து கலாநிதி இளையதம்பி பாலசுந்தரம். மா. நல்லரத்தினம். சட்டத்தரணி சாம் தில்லையா ஆகியோர் சிறப்புரைகள் ஆற்றினார்கள். தொடர்ந்து அமெரிக்கா வாழ் டாக்டர் தமிழ்ச் செல்வி முருகேசன் அவர்கள் சிறப்புரையாற்றி சபையோரை மகிழ்வித்தனர். அவரைத் தொடர்ந்து கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர். என். லோகேந்திரலிங்கமும் சிறப்புரையாற்றினார்.
கவிஞர் குமரகுரு நன்றியுரையாற்றினார்
செய்தியும் படங்களும்: சத்தியன்- கனடா உதயன்