பதவி விலகிய ‘திருடர்’களில் ஒருவரான பசில் ராஜபக்ச தெரிவிப்பு
இந்த அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்தவர்கள் இந்நாட்டின் மக்கள் தான். எனவே அவ்வாறு ஆட்சி அமைக்க வழிசமைத்தமையால் தற்போதைய நெருக்கடிக்கு பொதுமக்களையும் குற்றம் சுமத்த வேண்டும். இதை நான் முக்கியமாக வலியுறுத்துகின்றேன்” இவ்வாறு தெரிவித்தார் பதவி விலகிய நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ச.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். அதிகாரத்தை அரசாங்கத்திடம் கையளித்தமைக்கு பொது மக்கள் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர்கள் தற்போது அனுபவிக்கும் அனைத்து கஸ்டங்களும் தோன்றுவதற்கு அவர்களும் காரணகர்த்தாக்கள் ஆவார்கள்; என்றும் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட போது பின்வருமாறு தெரிவித்தார்.
“நான் இனி நாடாளுமன்றத்திற்கு தேவையில்லை. நிதியமைச்சராக பதவியேற்கவே நாடாளுமன்றத்திற்கு வந்தேன், தற்போது அமைச்சர் பதவியில் இருந்து விலகியதன் காரணமாக நான் நாடாளுமன்றத்திற்கு செல்லவில்லை” என்று தெரிவித்த அவர் தான் ஆட்சியில் இருந்த காலப்பகுதியில் தான் ஆற்றிய பணி குறித்து தனக்கு வருத்தம் இல்லை என்றும், அதே சமயம் தலையாட்டுவதை விட இறுதியான அமைப்பு மாற்றத்தை தான் எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் கூறினார்.
கட்சி வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உண்டு எனது இராஜினாமாவால் வெற்றிடத்திற்கு தேசியப் பட்டியல் மூலம் பொருத்தமான ஒருவர் நாடாளுமன்றத்திற்கு வருவார் என நான் எதிர்பார்க்கிறேன், சிறிலங்கா பொதுஜன பெரமுன் தேர்தலுக்கு தயாராக உள்ளது, கட்சி வெற்றிபெறும் என்ற நம்பிக்கையும் எனக்கு உள்ளது,” என்று அவர் கூறினார்.
தற்போது நடைபெற்று வரும் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் உட்பட, வெளியில் உள்ள எவரையும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு அனுமதிக்க கட்சி தயாராக உள்ளது. எனினும் இதனை மேலிடம் தான் தீர்மானிக்க வேண்டும்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே பொருளாதார நெருக்கடி நீடித்ததாகவும், நிதியமைச்சராக இருந்த குறுகிய காலத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவதற்காக அவர்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்ததாகவும் பசில் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
அவரது கருத்துக்கள் அனைத்தும் தன்னையும் தனது சகோதரர்களையும் காப்பாற்றும் வகையிலேயே அமைந்ததாகவும் மேற்படி கலந்துரையாடலில் கலந்து கொண்ட தமிழ் பேசும் ஊடகவியலாளர் ஒருவர் கருத்து வெளியிட்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.