(29-06-2022)
தற்போதைய நிர்வாகத்துக்கு எதிராக ஜனநாயக மக்கள் எழுச்சியை முன்னெடுக்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பாரிய அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நிலவும் நெருக்கடிக்கு முகங் கொடுத்து நாட்டைக் கட்டியெழுப்புதல் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தொடர் கலந்துரையாடலை ஆரம்பிக்க ஐக்கிய மக்கள் சக்தி அண்மையில் தீர்மானித்தது.
புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் குமார வெல்கமவின் முன்னிலையில் இந்த நிகழ்ச்சியின் முதல் கட்டம் நேற்று கொழும்பில் ஆரம்பமானது.
தற்போது நடைமுறையில் உள்ள அத்தியாவசிய சேவைகள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவையின் பதவிகளைப் பாதுகாப்பதற்கான சேவைகள் என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.
விவகாரங்கள் தீவிரமடைந்தால் மாத்திரமே அமைச்சர்கள் வெளிநாடுகளிடம் தீர்வுகளைத் தேடுகின்றனர் எனவும்,ஜனாதிபதியும் முழு அரசாங்கமும் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
























