(மன்னார் நிருபர்)
(30-07-2022)
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 21ஆம் திகதி மீன்பிடிக்க கடலுக்கு சென்று தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை ஒரு விசைப்படகையும் அதிலிருந்த ஆறு மீனவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தது.
இதையடுத்து ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 22ஆம் திகதி அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர்.
இதையடுத்து கடந்த 8 நாட்களாக ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது மீனவர்களின் வாழ்வாதாரம் கருதி தங்களுடைய வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்று இன்று சனிக்கிழமை (30) காலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர்.
மேலும் மீன் பிடிப்பதற்கான டீசல், ஐஸ்கட்டி, குடிநீர் உள்ளிட்ட அத்தியாசிப் பொருட்களை படகுகளில் ஏற்றி மீனவர்கள் கடலுக்குச் சென்றுள்ளனர்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ஆறு மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.