யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன்.
இலங்கை உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்ட கிளிநொச்சியில் முன்பள்ளிகளையும் இராணுவமயப்படுத்தும் நடவடிக்கைக்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது. வலிந்து இராணுவ மயமாக்கும் இந்த முயற்சி நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (9) அன்று யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனால் புகைப்பட ஆதாரங்களுடன் எழுப்பப்பட்டது
கிளிநொச்சியில் முன்பள்ளிகளின் பெயர்கள் இராணுவ மயப்படுத்தப்படுவதை எதிர்த்து மாணவர்களை கற்றல் செயல்பாட்டிற்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்புத் தெரிவிக்கின்றனர். சிறு வயது முதலே இராணுவ சிந்தனைகளை சிறார்கள் மத்தியில் விதைக்கும் நடவடிக்கையாகவே இதை கருத வேண்டியுள்ளது என்று உள்ளூர் மக்கள் உதயனிடம் தெரிவித்தனர்.
இந்த நடவடிக்கை தொடர்பில் சாதாரண மக்கள் தொடக்கம், கல்விமான்கள், சிவில் சமூகத்தினர், நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் என பல்தரப்பினர் இந்த முன்னெடுப்பை கண்டித்துள்ளனர்.
இலங்கையில் அரச நிர்வாகம் முதல் அணைத்துமே இராணுவ மயப்படுத்தலிற்கு இலக்காகும் நிலையில் முன்பள்ளிகளில் பல ஏற்கனவே இராணுவ கட்டமைப்புகொண்ட ஆசிரியர்களின் கீழ் கொண்டு வரப்பட்டு தற்போது பாடசாலைகளின் பெயர்களும் இராணுவ மயமாக்க செயற்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
கிளிநொச்சி முன்பள்ளிகளிற்கு இராணுவப் பெயர்
கிளிநொச்சி மாவட்டம், கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கண்ணகிநகர், புன்னைநீராவியிலுள்ள ‘பாற்கடற் பூங்கா முன்பள்ளியின்’ பெயர் கடந்த 2022.08.03 ஆம் திகதியும், அதே பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயில்வாகனபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ‘மயூரன் முன்பள்ளியின்’ பெயர் 2022.08.05ஆம் திகதியும் இராணுவத்தலையீட்டின் மூலம் ‘வீரமுத்துக்கள் முன்பள்ளி’ என மாற்றம் செய்யப்பட்டுள்ளமையை கண்டித்தே உள்ளூர் மக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
சிறு பிள்ளைகள் முன்பள்ளிக்கு அணிந்து செல்லும் சீருடையிலும் இராணுவ இலச்சினை பொறிக்கப்பட்டுள்ளது என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் சபையில் எடுத்துரைத்தார். இது வலிந்து முன்னெடுக்கப்படும் ஒரு உளவியல் தந்திரோபாயம் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.
இந்த செயல்பாடானது மாவட்டக் கல்வி அமைப்புகளின் சுயாதீன இயங்கு நிலையை கேள்விக்கு உட்படுத்தியுள்ளது. குறித்த இரு முன்பள்ளிகளும் அப்பிரதேச மக்களால் தற்போது மூடப்பட்டுள்ளதுடன் சிவில் பாதுகாப்பு பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் அப்பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோரது கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது.
ஆளுநருக்கு சிறீதரன் கடிதம்
மக்களின் விசனம் மற்றும் இராணுவத்தின் இந்த மறைமுகச் செயல்பாடு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவிற்கு கடந்த வெள்ளிக்கிழமை (5) அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் 2009 இறுதி யுத்தத்திற்குப் பிற்பாடு 2010ஆம் ஆண்டளவில் மீள்குடியேற்றம் நடைபெற்றபோது கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கல்வித் திணைக்களங்களின் மேற்பார்வையில் நடாத்தப்பட்டுவந்த பல முன்பள்ளிகள் இராணுவத்தினரின் சிவில் பாதுகாப்பு படைப்பிரிவினரால் (CSD) வலுக்கட்டாயமாக கையகப்படுத்தப்பட்டு அங்கு கற்பிக்கின்ற முன்பள்ளி ஆசிரியர்களும் சிவில் பாதுகாப்பு பிரிவின் நிர்வாக ஆளுகையின் கீழ் கொண்டுவரப்பட்டனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 303 பேர், முல்லைத்தீவு மாவட்டத்தில் 166 பேர், யாழ்ப்பாண மாவட்டத்தில் 12 பேர் உட்பட 481 முன்பள்ளி ஆசிரியர்கள் இராணுவப் படையணிச் சம்பளத்தைப் பெற்று கடமையாற்றும் சூழல் வலிந்து உருவாக்கப்பட்டது. அவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் அதே சம்பளத்தை மாகாண கல்வி அமைச்சினூடாக வழங்கி முன்பள்ளிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று பாராளுமன்றத்திலும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களிலும் பலதடவைகள் என்னால் வலியுறுத்தப்பட்ட போதும் உரிய தரப்பினர் இதுவரை எந்த முனைப்பும் மேற்கொள்ளவில்லை, என்று சிறிதரன் தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.
”குறிப்பாக உலக வரலாற்றில் எங்குமே இல்லாத வகையில் ஆரம்பக் கல்வியையே இராணுவமயப்படுத்தி உலகச் சிறுவர் உரிமைச் சட்டங்களை மீறி, பச்சிளம் சிறுவர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் இராணுவ மயப்படுத்தப்பட்ட கல்விமுறையை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதிலும் குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் திணிக்க முற்படுகின்றமையானது இன ஒடுக்குமுறையின் இன்னொரு வடிவமாகவே தென்படுகிறது”.
வடக்கு, கிழக்கிலுள்ள ஒவ்வொரு முன்பள்ளிகளுக்கும், அந்தந்த முன்பள்ளிகள் அமைந்துள்ள கிராமங்களிலுள்ள மக்கள் சமூகத்தின் பண்பாடு, கலாசார, மொழி, நில, வரலாற்று அடையாளங்களின் பிரதிபலிப்பாகவே தனித்துவம் மிக்கதான தனித்தனிப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. அந்த முன்பள்ளிகளின் பெயர்கள் குறிப்பிட்டதோர் மக்கள் குழுமத்தின் உணர்வுகளோடு இரண்டறக்கலந்த அடையாளங்களாகவே பார்க்கப்பட்டுவருகின்றன என சிறீதரன் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், குறித்த முன்பள்ளிகளின் பொறுப்பாசிரியர்கள், முன்பள்ளி முகாமைத்துவக் குழு, பெற்றோர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சமூகமட்ட அமைப்புக்களின் ஒப்புதலற்று இராணுவத் தலையீட்டினால், பலவந்தமாக ஒரு முன்பள்ளியின் பெயரை வலிந்து மாற்றம் செய்து, இராணுவத் துணைப்பிரிவொன்றின் சின்னம் பொறிக்கப்பட்ட பெயர்ப்பலகையை காட்சிப்படுத்துவதென்பது எமது மாவட்டத்தின் கல்வித்துறையில் செல்வாக்குச் செலுத்தும் இராணுவ எதேச்சதிகாரத்தனத்தின் வெளிப்பாடே ஆகும் என அவரது கடிதம் சாடுகிறது.
ஒரு இனத்தின் அடிப்படை மூலாதாரமான கல்வி உரிமையைப் பறிப்பதனூடாக அந்த இனக்குழுமத்தின் அடையாளம் அழிக்கப்படும் என்பதை அறிந்து, அவ்வாறான செயற்பாடுகளை தமிழர் தாயகப் பகுதிகளில் அரங்கேற்றி வருவது குறித்து, தாங்கள் வடக்கு மாகாண ஆளுநர் என்றவகையில் அக்கறை கொள்ளாதிருப்பது பல்வேறு வழிகளிலும் வலிதாங்கி நிற்கும் எமது மக்களை மேலும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடக்கு மாகாண ஆளுநருக்கு கடிதம் எழுதி தனது அதிருப்தியை வெளியிட்டுளார்.
அதேவேளை, முன்பள்ளிகளின் சுயாதீன இயங்குநிலையில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அவற்றுக்கு இராணுவப் பெயர்களைச் சூட்டும் நிகழ்ச்சிநிரலை பரவலாக அமுலாக்கம் செய்யும் முனைப்புக்களின் முதற் கட்டமாகவே பாற்கடற் பூங்கா முன்பள்ளி, மயூரன் முன்பள்ளி உட்பட வேறுசில முன்பள்ளிகளுக்கும் இராணுவப்பெயர்கள் சூட்டப்பட்டுள்ளதாக தான் அறிவதாக அவர் கூறுகிறார்.
”தமது கல்வி, அதனூடான வளமான எதிர்காலம் என்னும் அழகிய கனவுகளோடு முதலடி எடுத்துவைக்கும் முன்பள்ளிச் சிறுவர்கள் உள ரீதியான தாக்கங்களுக்கும், நெருக்கடிகளுக்கும் உள்ளாகாது தமது கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக, முன்பள்ளிகளின் சுயாதீன இயங்குநிலையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இத்தகு செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துவதன் மூலமே, வடக்கு, கிழக்கு மாகாணங்களின் கல்வித்துறையில் இராணுவத்தலையீட்டை நீக்க முடியும்”.
எனவே தயவுசெய்து, அரச நிர்வாக நடைமுறைகளுக்கு அமைய உருவாக்கப்பட்டு, நீண்டகாலமாக இயங்கிவரும் முன்பள்ளிகள், தமக்குரிய தனித்துவமான பெயரோடும் அடையாளத்தோடும் இயங்குவதற்கு ஏதுவாக, சிவில் பாதுகாப்பு பிரிவினரால் புதிதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெயர்ப்பலகைகளை உடனடியாக அகற்றுவதற்கும், வடக்கு, கிழக்கிலுள்ள முன்பள்ளிகளின் பாரம்பரிய பெயர்களை நீக்கம் செய்து அவற்றுக்கு இராணுவப் பெயர்களைச் சூட்டும் நிகழ்ச்சிநிரலை தடுத்து நிறுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறும் சிறீதரன் கோரியுள்ளார்.
இதன் பிரதிகளை செயலாளர், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சு, வடக்கு மாகாணம் உட்பட அதிகாரிகளுக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணையத்திற்கும் அவர் அனுப்பியுள்ளார். மேலதிகமாக 9 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இதை அவர் எழுப்பியுள்ளார்.
சிவில் பாதுகாப்பு திணைக்கள ஊதியம் பெறும் ஆசிரியர்கள்.
வடக்கு மாகாணத்தில் மட்டும் 500 க்கும் அதிகமான ஆசிரியர்கள் சிவில் பாதுகாப்பு திணைக்கள ஊதியம் பெறுகின்றனர் என்பது புள்ளிவிவர தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இயங்கும் முன்பள்ளிகள் பலவற்றின் ஆசிரியர்கள் சிவில்பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் நியமனம் செய்யப்பட்டு இன்றுவரை அதன் கீழேயே 35 ஆயிரம் ரூபா வரையான ஊதியத்தைப் பெறுகின்றனர். இதில் யாழ்ப்பாணத்தில் 13 முன்பள்ளி ஆசிரியர்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 322 பேரும் பணியாற்றுவதோடு முல்லைத்தீவு மாவட்டத்தில் 173 பேரும் குறித்த சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் ஊதியம்பெறும் ஆசிரியர்களாக பணியாற்றுகின்றனர்.
இந்த நியமனத்தின்போதே முன்பள்ளிகள் இராணுவ மயப்படுத்தலிற்கான அத்திவாரம் போடப்பட்டது என அன்றே பலரும் குற்றம் சாட்டியிருந்தனர் அதன் இரண்டாம் கட்டம் தற்போது அமல்படுத்தப்படுகின்றதா என்ற ஐயம் முன்வைக்கப்படுகின்றது.
ஏனெனில் இந்த ஆசிரியர்கள் கற்பிக்கும் பாடசாலை சிறார்களின் சீருடையில் ஏற்கனவே இராணுவச் சின்னம் புகுத்தப்பட்டபோது எதிர்ப்பு எழுந்தாலும் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.