வனம் இன்றிப்போனால் எம் இனம் இன்றிப்போகும் என்ற கருப்பொருளில் வனங்களின் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லும் வனமே என் இனமே என்ற காணொலிப்பாடல் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால் நேற்று வெள்ளிக்கிழமை (25.11.2022) வெளியிடப்பட்டுள்ளது.
வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் ஏற்பாடு செய்துள்ள மலர்க்கண்காட்சியின் போதே இக்காணொலிப்பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் கலை இலக்கிய அணியின் துணைச்செயலாளர் கை. சரவணனின் தலைமையில் நடைபெற்ற வெளியீட்டு நிகழ்ச்சியில் இசைவாணர் கண்ணன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு காணொலிப்பாடலின் முதல் திரையிடலைத் தொடக்கி வைத்தார். திரையிடலைத் தொடர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறையின் தலைவர் பேராசிரியர் சி. ரகுராம் கருத்துரையை வழங்கினார்.
வனமே என் இனமே பாடலை பூவன் மதீசன் எழுதிப்பாடி நடிக்க ராஜ் சிவராஜ் இயக்கியுள்ளார். இது தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் ஒரு தயாரிப்பாகும்.




























