எமது யாழ்ப்பாணம் செய்தியாளர்
வடக்கு மாகாண ஆளுநரால் நிறைவேற்றப்பட்ட நியதிச் சட்டம் தொடர்பில் ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்யப்படுவதாக வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்தார்.
அவைத் தலைவரின் அலுவலகத்தில் ஞாயிறு (26) நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதை தெரிவித்தார்,
வடக்கு ஆளுநர் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27ஆம் திகதி நியதிச் சட்டங்கள் என்று சொல்லப்படுகின்ற இரண்டினை வர்த்த மானியில் பிரசுரித்துள்ளார். ஒன்று வாழ்வாதாரம் தொடர்பான விடயம் இரண்டாவது சுற்றுலா தொடர்பான விடயங்கள் என்ற இரண்டு நியதிச் சட்டங்களையும் நிறைவேற்றியுள்ளார். இந்த இரண்டுமே ஆளுநருடைய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டதும் சட்டவிரோதமான விதமான முறையற்றது. இந்த விடயம் மாகாண சபைகள் சம்பந்தமான அரசியலமைப்பு மற்றும் மாகாண சபைகள் கட்டளை சட்டத்திற்கு முரணானது என்று சிவஞானம் தெரிவித்தார்.
மாகாண சபை சட்டத்தின் படி ஆளுநர் தனது அதிகாரங்களை ஜனாதிபதியின் பணிப்புரையின் பெயரால் செயல்படுத்த முடியும் என்றுள்ளது. எனவே ஆளுநருக்கு சட்டவாக்க அதிகாரம் எந்த இடத்திலும் கொடுக்கப்படவில்லை, எந்த இடத்திலும் ஆளுநர் சட்டம் இயற்றலாம் என்றும் குறிப்பிடப்படவில்லை என்பதையும் வடக்கு மாகாண அவைத்தலைவர் சுட்டிக்காட்டினார்.
”இவர் எதேச்சியதிகாரமாக இந்த இரண்டு நியதிச் சட்டங்களையும் பிரகடனப்படுத்தியுள்ளார். மாகாண சபைகளிடம் இருக்கக்கூடிய அதிகாரங்களையும் ஜனாதிபதியின் பிரதிநிதியாக ஆளுநர் பறித்தெடுக்கின்றார் என்பதே இந்த நியதிச் சட்ட உருவாக்க முயற்சியில் உள்ள விடயம். அதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இது பாரதூரமான ஒரு விடயம் அரசியல் ரீதியாக கண்டிக்கப்பட வேண்டிய விடயம் அரசியல் ரீதியில் பாதிப்பான விடயம். எங்களுக்கு இருக்கக்கூடிய அதிகாரங்களையும் பறிக்கக் கூடிய ஒரு செயற்பாடாக காணப்படுகின்றது”.
இந்த விடயத்தில் தாங்கள் விழிப்பாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமானது என்று வலியுறுத்திய சிவஞானம், ஆளுநர் தன்னை அதிகாரமாக கேட்பதற்கு யாரும் இல்லை என்ற நிலையில் செயற்படுகின்றார். எனவே இந்த விடயம் தொடர்பில் உடனடியாக ஜனாதிபதிக்கு தெரியப்படுத்துவதற்கு தாங்கள் தீர்மானித்துள்ளதாகவும் உடனடியாகவே ஜனாதிபதி மற்றும் உள்ளூராட்சி அமைச்சருக்கும் இந்த விடயத்தினை தெரியப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
நாட்டின் அரசியல் யாப்பு மற்றும் சட்ட நியமங்களின்படி தனக்கு அதிகாரமற்ற நிலையில் அதற்கு முரணாக ஆளுநர் நியதிச் சட்ட உருவாக்கம் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டமை அறியப்பட்டுள்ளது. அது கண்டிக்கத்தக்கது என்றார் வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர்.
அரசியலமைப்பின் பிரகாரம் மாகாண நியதிச் சட்டங்களை உருவாக்கும் அதிகாரம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட சபைகளிற்கு உரியதே அன்றி மாகாண ஆளுநருக்கு கிடையாது. இருப்பினும் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா 2022-10-27 அன்று வட மாகாணத்தின் வாழ்வாதார முகாமைத்துவ சேவைகள் நியதிச் சட்டம் மற்றும் சுற்றுலாப் பணியகம் நியதிச் சட்டம் என இரு நியதிச் சட்டங்களை 2303/29 இலக்க வர்த்தமானி அறிவித்தலின் மூலம் பகிரங்கப்படுத்தியுள்ளார்.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் 154- எ-01 இன் பிரகாரம் ”ஒவ்வொரு மாகாண சபையும் 9 ஆம் அட்டவணையின் முதலாம் நிகழ்ச்சி நிரலின் ( மாகாண சபை நிரல்) ஏதேனும் கருமம் தொடர்பில் எம்மாகாணத்திற்கென அச்சபைபை ஸ்தாபிக்கப்பட்டதோ அம்மாகாணத்திற்கு ஏற்புடையதான நியதிச் சட்டங்களை ஆக்கலாம்” என்றே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
”ஆளுநருக்கு தனக்குரிய பணியே தெரியவில்லை. தெரியாதுவிடின் அனுபவம் உடையவர்களிடம் கேட்டுச் செயல்படலாம் அதுவும் தவறு கிடையாது. அல்லது அரசியலமைப்பைப் படித்தால் புரியும்.
மாறாக அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் இயக்குநர் கீழ் பணியாற்றும் பணியாளர்களிற்கு உத்தரவு போடுவது போன்று செயல்பட்டு ஆளுநர் பதவியைக் கொச்சைப்படுத்தக் கூடாது”.
ஓர் ஆளுநர் நியதிச் சட்டத்தை நிறைவேற்றும் அதிகாரம் உண்டு என வடக்கு மாகாண ஆளுநர் விவாதிப்பாரேயானால் அது தொடர்பில் பகிரங்க விவாதத்திற்கும் தான் தயாராகவே உள்ளேன் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா விமர்சித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.