யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன்
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் வவுனியா மேல் நீதிமன்றம் மிகவும் முக்கியமான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.
விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட இறுதிக்கட்ட போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிறுத்துமாறு வவுனியா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான வழக்கின் முதலாவது தீர்ப்பு வவுனியா மேல்நீதிமன்றால் வெள்ளிக்கிழமை (16) பிறப்பிக்கப்பட்டது.
இதில் மனுதாரர்கள் சார்பில் நீதிமன்றில் ஆஜராகிய சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் வழக்கு விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.
போர் முடிந்த இறுதி கட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள்- அதாவது இலங்கை இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய பல வழக்குகள் விசாரணைக்கு வந்திருந்தன.
அவற்றில் முதல் ஐந்து வழக்குகளின் தீர்ப்பு வெள்ளியன்று வவுனியா நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்கின் பூர்வாங்க விசாரணை முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்று. அதன் பின்னர் நீதவானின் அறிக்கையின் பிரகாரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் எல்லா மனுதாரர்களும் தமது சாட்சியங்களை அளித்தனர். பின்னர் இராணுவம் சார்பாகவும் சாட்சியம் அளிக்கப்பட்டது.
இதன் போது சாட்சியமளித்த இராணுவ அதிகாரி சரணடைந்தவர்களின் பட்டியல் தங்களிடம் இருப்பதாகக் கூறியிருந்தார். எனினும் அந்த பட்டியலை நீதிமன்றிற்கு சமர்ப்பிக்கப்படவில்லை.
பின்னர் இந்த வழக்கு மேல்நீதிமன்றில் பரிசீலிக்கப்பட்டு 16ஆம் திகதி முதலாவது வழக்கு தீர்ப்பு வாசிக்கப்பட்டது. அதன் பிரகாரம் மனுதாரர் தன்னுடைய கணவர் தனது கண்முன்னாலே தாங்களே சரணடைய வைத்து முகாமில் செய்த அறிவித்தலின்படி-அதாவது சரணடைந்தவர்கள் பாதுகாப்பாக வைக்கப்படுவார்கள் என்ற வாக்குறுதியின் அடிப்படையில்- தன்னுடைய கணவரை சரணடையச் செய்து அதன் பின் தன்னுடைய கணவர் இராணுவத்தினரால் கொண்டு செல்லப்பட்டார் என்றார் என்று முன் வைத்த வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
அந்த மனுதாரரின் கணவர் அதாவது காணாமல் ஆக்கப்பட்டவர் இராணுவத்தின் மத்தியில் தான் இருந்தார், அவர்களுடைய கட்டுப்பாட்டில் தான் இருந்தார் என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அதே சமயத்தில் அதனை எதிர்த்த இராணுவ தரப்பினர் அது தொடர்பான திருப்திகரமான பதிலையும் முன்வைக்கவில்லை என்ற ஒரு நிலைப்பாட்டை நீதிமன்றம் எடுத்தது.
அதாவது காணாமல் ஆக்கப்பட்ட நபர் இராணுவத்திடம் சரணடையவில்லை என்றால் அதனை நிரூபிக்கும் பொறுப்பு இராணுவத்திடம் இருந்தது. ஆனால் அந்த பொறுப்பை அவர்கள் தங்களுடைய சாட்சியங்கள் மூலம் சரிவர வில்லை நிரூபிக்கவில்லை என்று நீதிமன்றம் கருதியது.
எனவே மனுதாரரின் வேண்டுகோளின் பிரகாரம் ஆட்கொணர்வு மனுவினுடைய எழுத்தாணையை நீதிமன்றம் அனுமதித்து அடுத்த தவணையான 22.03.2023 அன்று காணாமல் ஆக்கப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும் அல்லது அவரை முன்னிலைப்படுத்த முடியாமைக்கான காரணங்களை விளக்க வேண்டும் என்று நீதிமன்று உத்தரவிட்டது.
அதே சமயத்தில் இன்னுமொரு வழக்கில் மனுதாரர் போதுமான ஆவணங்களை நீதிமன்றின் முன்னால் சமர்ப்பிக்கவில்லை என்ற காரணத்தின் அடிப்படையில் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றது.
அடுத்த மூன்று வழக்குகளும் அடுத்த வருடம் ஜனவரி 27 ஆம் திகதி நீதிமன்றத்தில் கூப்பிடப்பட்டு அதன் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார்.