(மன்னார் நிருபர்)
(5-01-2023)
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் ‘ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெற முடியாத சமஸ்டியை வலியுறுத்துவதற்கு’ அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரணியில் திரண்டு செயல்படக் கோரி வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களை ஒன்றிணைத்து கவனயீர்ப்பு போராட்டம் இன்று வியாழக்கிழமை (5) காலை முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிலையில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் வடமாகாண இணைப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் இன்று வியாழக்கிழமை(5) காலை 10 மணி தொடக்கம் 11 மணி வரை மன்னார் நகர சுற்று வட்ட பகுதியில் இடம்பெற்றது.
இதன் போது சிவில் அமைப்புகள், பாதிக்கப்பட்ட மக்கள்,கல்விமான்கள்,ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோர் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது கலந்து கொண்டவர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக தமிழ் அரசியல் கட்சிகள் இடையே அரசியல் தீர்விற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்,வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீள் ஒருங்கிணைக்கப்பட்டு வடக்கு கிழக்கு ஒரு தனி மாகாண அலகாக உருவாக்கப்பட வேண்டும்,அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள்க, உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து தமது கோரிக்கை அடங்கிய மகஜர் வாசித்தனர்.
குறித்த மகஜரில் மேலும் குறிப்பிடுகையில்,,,
அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளுக்கும்,
ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள்க.
வடக்கு கிழக்கு சிறுபான்மை மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்த பேச்சு வார்த்தைகள் சிறுபான்மை தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதி நிதிகளுக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் இடையே நடைபெறவுள்ளதாக அறிகின்றோம். – அதை நாங்கள் பெரிதும் வரவேற்கின்றோம்.
எனினும், தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் கோரிக்கைகளையும், அரசியல் தேவைகளையும் உள்ளடக்கிய வகையில் இப்பேச்சு வார்த்தைகள் அமைய வேண்டுமானால் இப்பேச்சு வார்த்தைகள் வெளிப்படை தன்மை உடையதாக நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம்.
ஆனால் தற்போதைய நிலையில் தமிழ் அரசியல் கட்சிகளிடையே அரசியல் தீர்விற்கான நடவடிக்கைகள் ஒருமித்த முறையில் முன்னெடுக்கப்படவில்லை என்பதை நாம் வருத்தத்துடன் தெரிவிக்கிறோம்.
மேலும், நடைபெற உள்ள அரசியல் தீர்வு தொடர்பான இப் பேச்சு வார்த்தைகளில் தனியொரு கட்சியைச் சார்ந்த ஒரு சில பிரதிநிதிகள் மாத்திரம் கலந்து கொள்ளவுள்ளதாக ஊடகங்கள் ஊடாக தகவல்கள் வெளி வருகின்றமையை நாம் பார்க்கின்றோம்.
மேலும், அக்குறிப்பிட்ட அரசியல் கட்சியின் தலைமைத்துவங்களிடேயும் பரஸ்பரம் வெளிப்படைத் தன்மையுடைய கலந்துரை யாடல்களோ, ஒருமித்த முன்னெடு ப்புக்களோ காணப்படாததை நாங்கள் இங்கு சுட்டிக் காட்டுகிறோம். இது இத்தரப்பினர்களை தேர்தல் மூலம் தெரிவு செய்த மக்கள் மத்தியில் காணப்படும் விமர்சனமாக உள்ளது.
இத்தகைய நடவடிக்கைகள் தமிழ் மக்களின் நிலையான அரசியல் தீர்வுக்கு பங்கம் விளைவிக்கும் ஜனநாயகமற்ற போக்காக காணப்படுவதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
எனவே அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரண்டு ஒரே குரலில் ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்த வேண்டும்.
இதுவே தமிழ் மக்கள் தமது ஜனநாயக வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்த தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதி நிதிகளின் கடமையாகும்.
அந்த வகையில் கீழ் குறிப்பிடப்படும் முக்கிய விடயங்களிலும், ஏனைய விடயங்களிலும் கவனம் செலுத்துமாறு வேண்டுகின்றோம்.
01. வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீள ஒருங்கிணைக்கப்பட்டு வடக்கு கிழக்கு தனி ஒரு மாகாண அலகாக உருவாக்கப்பட வேண்டும்.
02. ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மத்திய அரசினால் மீளப் பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும்.
03. ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாண அலகின் ஆட்சியானது மக்களால் ஜனநாயகமான தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் சபையால் மேற்கொள்ளப்பட வேண்டும். இதில் பெண்கள் ஐம்பது வீதம் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.
04. வடக்கு கிழக்கு மாகாண எல்லைக்கு உட்பட்ட காணிகள் யாவும் மாகாண ஆட்சியின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாக அமைய வேண்டும்.
05.தற்போது வடக்கு கிழக்கில் காணப்படும் இராணுவமயமாக்கல் முற்றிலும் நீக்கப்பட்டு, தேசிய பாதுகாப்புக்கான இராணுவம் என்பது 1983 களுக்கு முன்னர் இருந்த இடங்களில் மாத்திரம் நிலைநிறுத்தப்பட வேண்டும்.
06. வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் மத, கலாச்சார இடங்கள் தொல்பொருள் பிரதேசம் என அடையாளப்படுத்தப்பட்டு ஆக்கிரமிக்கப் படுவதும் அழிக்கப்படுவதும் உடன் நிறுத்தப்படல் வேண்டும்.
07. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.உள்ளிட்ட கோரிக்கைகளும் முன் வைக்கப்பட்டு மகஜர் ஊடகங்களுக்கு வாசிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.