ரஷ்யாவில் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த விஞ்ஞானிகளில் ஒருவரான ஆண்ட்ரே போடிகோவ் (Andrey Botikov). 47 வயது நிரம்பிய போடிகோவ், கமலேயா தேசிய ஆராய்ச்சி மையத்தில் மூத்த விஞ்ஞானியாக பணியாற்றி வந்தார். 2020 ஆம் ஆண்டு கொரோனாவுக்கு எதிரான ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை கண்டுபிடித்த 18பேர் கொண்ட குழுவில் போடிகோவும் ஒருவர்.
இவர் அளித்த பங்களிப்பிற்காக, ரஷ்ய அதிபர் புதின் அவரை அழைத்து கவுரவித்திருந்தார். இந்த நிலையில் கடந்த 2ஆம் தேதி அவரது வீட்டில் போடிகோவ் சந்தேகத்திற்குரிய வகையில் சடலமாக கிடந்தார். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், பெல்டால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக 29 வயது இளைஞர் ஒருவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த நபர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் ரஷ்ய காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு ரஷ்யாவின் சிறந்த விஞ்ஞானிக்கான விருதை ஆண்ட்ரே போடிகோவ் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.