பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பேச்சுக்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
பாகிஸ்தானின் பிரதமராக இருந்த இம்ரான் கான், தனக்கு கிடைத்த பரிசுப் பொருட்கள் குறித்த தகவல்களை அளிக்க மறுப்பதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு இம்ரான் கான் தரப்பு விடுத்த கோரிக்கையை கடந்த 28-ம் தேதி நிராகரித்த நீதிமன்றம், ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டைப் பிறப்பித்தது.
இதனைத் தொடர்ந்து, இம்ரான் கானை கைது செய்வதற்காக லாகூரில் உள்ள அவரது இல்லத்துக்கு போலீஸார் நேற்று சென்றனர். அப்போது, பாகிஸ்தான் தெஹ்ரீக் கட்சியினர் பெருமளவில் அங்கு குவிந்தனர். மேலும், இம்ரான் கான் இல்லை என்று தெரிவித்தனர். எனினும், தனது ஆதரவாளர்கள் மத்தியில் இம்ரான் கான் உரையாற்றியது தெரியவந்துள்ளது.
இம்ரான் கானின் பேச்சுக்கள், பேட்டிகள் உள்ளிட்டவற்றை ஏற்கனவே பதிவு செய்ததாகவோ, நேரலையாகவோ ஒளிபரப்பக் கூடாது என்று தொலைக்காட்சிகளுக்கு மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. லாகூர் இல்லத்தில் இம்ரான் கான் இல்லை என்று கூறிய பாகிஸ்தான் தெஹ்ரீக் கட்சியின் மூத்த தலைவர் சிப்லி ஃபராஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.