தூக்கத்தை தொலைத்துவிட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என இன்றைய காலத்தில் பலரும் புலம்புவதை பார்த்திருப்போம். ஆனால், இங்கிலாந்தில் ஒரு பெண் தனது தூக்கத்தை எப்படி தொலைப்பது என்று தவித்து வருகிறார். காரணம், இவருக்கு ஒரு நாளைக்கு 18இல் இருந்து 22 மணிநேரம் தூக்கம் வருகிறதாம். இவருக்கு இருப்பது அரிய வகை நோய் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இங்கிலாந்து நாட்டின் மேற்கு யார்க்ஷைர் பகுதியில் வசிப்பவர் 38 வயதான பெண் ஜோனா காக்ஸ். திருமணமாகி இவருக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். 2017 ஆண்டில் இருந்து இவரின் உடல் ஆரோக்கியத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வழக்கத்துக்கு மாறாக இவர் பகல் வேலைகளில் களைப்புடன் காணப்பட்டு தூங்கி வழிந்துள்ளார். ஏதோ உடல் சோர்வு தான் தனக்கு ஏற்பட்டதாக கருதி வந்த நிலையில், ஒரு கட்டத்தில் பகல் நேரத்தில் வேலை செய்யும் போது தன்னை அறியாமலேயே தூங்க தொடங்தியுள்ளார்.
நாளடைவில் இது தீவிரமடைய இவரால் பகல் பொழுதில் வேலை பார்க்க முடியவேயில்லை. நேரம் காலம் அறியாமல் தூக்கம் வரவே, 2019இல் இவர் தனது வேலை விடும் சூழலுக்கு தள்ளப்பட்டார். பின்னர், ஒவ்வொரு மருத்துவர்களாக அனுகி தனது பிரச்னையை கூறிவந்துள்ளார். இந்நிலையில், 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தான் idiopathic hypersomnia என்ற அறிய வகை நோய் இவருக்கு இருப்பது கண்டறியப்பட்டது. இந்த இடியோபாடிக் ஹைப்பர்சோம்னியா என்பது அரிய வகை அசாதாரண தூக்க கோளாறு நோயாகும். இந்த நோய் இருப்பவர்களால் இரவில் நன்கு தூங்கினாலும், பகலிலும் கடும் தூக்கத்திற்கு ஆளாவர்களாம்.
இதற்கான காரணம், சிகிச்சை ஆகியவை இன்னும் முறையாக கண்டறியப்படவில்லை. உலகில் வெகு சிலருக்கே இந்த நோய் பாதிப்பை அனுபவிக்கின்றனர். இது 38 வயதான ஜோனாவுக்கும் ஏற்பட்டுள்ளது. ஒரு நாளில் 18இல் இருந்து 22 மணிநேரம் தூங்கியே கழிப்பதாக கூறும் இவர், தனது வாழ்க்கையையே தூக்கம் சீரழிப்பதாக வேதனையுடன் தெரிவிக்கிறார்.
இந்த நோய்யின் முழு தன்மை பிடிபடுவதற்கு முன்பு எங்கு சென்றாலும் தன்னை அறியாமலேயே தூங்கும் நிலைக்கு ஆளான ஜோனா ஒரு கட்டத்தில் பாதுகாப்பு கருதி வாகனங்களை ஓட்டுவதை கூட நிறுத்திவிட்டார். தனது மகள்களுக்கு வெளியே சென்று நேரத்தை கழிக்க முடியாத அவலமான வாழக்கையை கொண்டுள்ளதாக ஜோனா ஆதங்கத்துடன் கூறுகிறார்.
ஒரு நாளைக்கு 2இல் இருந்து 4 மணிநேரம் தான் விழித்திருக்க முடியும் என்பதால் ரெடிமேட் புரோட்டின் உணவுகள், ஷேக் போன்ற பானங்களை அருந்தி தான் உயிர்வாழ்வதாக கூறுகிறார். சமீபத்தில் ஒரே ஒரு நாள் மட்டும் இவரால் 12 மணிநேரம் விழித்திருக்க முடிந்ததாம். கடந்த ஆறு ஆண்டுகளில் அதிக நேரம் விழித்திருந்த நாள் அது தான் சொல்கிறார் ஜோனா. ஏதாவது ஒரு சிகிச்சை மூலம் அதிசயம் நிகழ்ந்து தனது நோய் பிரச்னை தீரும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் ஜோனா.