அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அடுத்தடுத்து உருவான புயல்கள் காரணமாக பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் தெற்கு சான் ஃப்ரான்சிஸ்கோ, ஸ்பிரிங்வில்லி, பஜாரோ, சாண்டா குரூஸ் ஆகிய பகுதிகளில் வீடுகள், கட்டடங்கள் உள்ளிட்டவை இருக்கும் இடம் தெரியாத அளவுக்கு தண்ணீரில் மூழ்கியுள்ளன.
மேலும், முக்கிய சாலைகள் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டதால் போக்குவரத்தும் முடங்கியுள்ளது. தொடர்ந்து, மின்கம்பங்கள், மரங்கள் உள்ளிட்டவை சாய்ந்ததால் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு பல இடங்கள் இருளில் மூழ்கியுள்ளன. இதையடுத்து, தாழ்வான பகுதிகளில் இருந்தவர்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர்.
அந்தவகையில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெள்ள பாதிப்பு பகுதிகளில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். தொடர்கன மழை வெள்ளத்தால் கலிபோர்னியா மக்கள் அவதியடைந்துள்ளனர்.