சீனாவின் ஷான்சி மாகாணத்தில் இன்ஃப்ளூயன்சா வைரஸில் தாக்கம் அதிகரிப்பதினால், கொரானா காலத்தில் இருந்தது போல் மீண்டும் ஊரடங்கு முறை அமல்படுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஷான்சி மாகாணத்தில் ஷியான் நகரம், பிரபலமான சுற்றுலா தளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. தற்போது இங்கு இன்ஃப்ளூயன்சா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு அவசரக் கால திட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அவசரக்கால திட்டத்தின் படி முதல் கட்டமாக மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மூடப்படும், தொடர்ந்து, வணிக வளாகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 13 மில்லியன் மக்கள் வாழும் இடத்தில் வைரஸின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு அவசரக்கால திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
முதல் நிலையில், மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், திரையரங்குகள், நூலகங்கள், அருங்காட்சியகம் மற்றும் சுற்றுலா தளங்கள் போன்றவை மூடப்படும். அதனைத் தொடர்ந்து, தொற்று அதிகரிக்கும் நிலையில், கல்வி நிலையங்கள் மூடப்பட்டு குழந்தைகள் மற்றும் மாணவர்களின் உடல்நிலை கண்காணிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அமல்படுத்தவுள்ள இந்த அவசரநிலை மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவால் ஏற்கனவே ஜீரோ கோவிட் திட்டத்தினால் ஆயிரக்கணக்கான மக்கள் உணவு, குடிநீர் இல்லாமல் தவித்தநிலையில் மீண்டும் ஊரடங்கு என்றால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.