அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பாலியல் நடிகை ஸ்டாமி டேனியல் (Stormy Daniels) என்பவருடன் நெருக்கமாக இருந்ததாக 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தல் நேரத்தில் கூறப்பட்டது. இந்த தகவல் அப்போதைய தேர்தல் களத்தில் பூதாகரமாக வெடித்தது. அதனை மறைப்பதற்காக நடிகைக்குத் தேர்தல் பரப்புரைக்கான நிதியில் இருந்து ட்ரம்ப் பணத்தை கொடுத்ததாகவும் கூறப்பட்டு அவர் மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு மன்ஹாட்டான் மாவட்ட வழக்கறிஞர் அலுவலகத்தில் விசாரணையில் உள்ளது. ட்ரம்பின் முன்னாள் வழக்கறிஞரான மைக்கேல் கோஹன், இந்த வழக்கில் ட்ரம்பிற்கு எதிராக சாட்சியளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நடிகைக்குப் பணம் வழங்கியதிற்கான ஆதாரத்தையும் வழக்கறிஞர் அலுவலகம் கைப்பற்றியுள்ளதாகத் தெரிகிறது.
இதனிடையே, வழக்கு விசாரிக்கப்படும் வழக்கறிஞர் அலுவலகத்தில் இருந்து கசிந்த ரகசிய ஆவணங்களை மேற்கோள்காட்டி ட்ரம்ப், தான் மார்ச் 21 ஆம் நாள் கைது செய்யப்படவுள்ளதாகக் கூறியுள்ளார். மேலும் அவரின் ஆதரவாளர்களைப் போராட்டத்திற்குத் தயாராக வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ட்ரம்பிற்கு ஆதரவாக அவரின் ஆதரவாளர்கள் தலைநகர் வாஷிங்டன் டிசியிஇல் உள்ள வெள்ளை மாளிகையின் உள்ளே புகுந்து நடத்திய போராட்டம் உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மீண்டும் ட்ரம்ப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருப்பது அமெரிக்க அரசியல் வட்டாரங்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வேளை இவ்வழக்கில் ட்ரம்ப் கைது செய்யப்பட்டால், குற்ற வழக்கில் கைதாகும் முதல் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.