வங்கதேச நாட்டில் இன்று காலை ஏற்பட்ட கோர பேருந்து விபத்தில் பெரும் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் தலைநகரான தாக்காவில் இருந்து 63 கிமீ தொலைவில் உள்ள மதாரிபூர் என்ற பகுதியில் உள்ள விரைவு சாலையில் இந்த பேருந்து பயணித்துக் கொண்டிருந்தது.
காலை 7.30 மணி அளவில் பேருந்தின் கட்டுப்பாட்டை ஓட்டுநர் இழந்த நிலையில், விரைவு சாலையின் ஓரத்தில் இருந்த தடுப்பு வேலியில் மோதி, அபகுதியில் உள்ள அழமான சாக்கடையில் தவறி விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்து காரணமாக பேருந்தில் பயணித்த 17 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர், பாதிக்கப்பட்டவர்களை மீட்டு தாக்கா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சிகிச்சை பெரும் சிலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களை அடையாளம் காணும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பேருந்தின் டயர் வெடித்ததால் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்திருக்க கூடும் என தீயணைப்புத்துறை அதிகாரி ஷில்பு அகமது தெரிவித்துள்ளார். மீட்பு பணிகள் நிறைவடைந்ததும் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படும் என்றார்.
மோசமான சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் நாடுகளில் ஒன்றாக வங்தேசம் பார்க்கப்படுகிறது. அங்குள்ள சாலைகள் மற்றும் பொது வாகனங்களின் ஓட்டுநர்கள் உரிய தரம் கொண்டவர்களாக இல்லை என புகார்கள் தொடர்ச்சியாக எழுந்த வண்ணம் உள்ளது.