ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் பாகிஸ்தானின் வடமேற்கு எல்லை மாகாணத்தில் உணரப்பட்டது. வீடு உள்ளிட்ட கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் ஒரு சிறுமி உள்பட இருவர் உயிரிழந்திருப்பதாகவும் ஏராளமானோர் காயம் அடைந்திருப்பதாகவும் முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவாகி உள்ள இந்த நிலநடுக்கம், ஸ்வட் பள்ளத்தாக்கு மற்றும் பெஷாவர் பகுதிகளிலும் உணரப்பட்டு உள்ளது. ஸ்வட் நகரில் நில நடுக்கத்தின் போது பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு வீதியில் தஞ்சம் அடைந்த காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன.
ஸ்வட் நகரில் நிலநடுக்கத்தின் போது காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதித்து வருகின்றனர். இதனால் நகரின் பல்வேறு இடங்களில் ஆம்புலன்ஸ் சத்தம் ரீங்காரமிட்டுக் கொண்டே உள்ளன.இதனிடையே பாகிஸ்தானில் நிலநடுக்கத்தின் போது தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளர் செய்தி வாசித்துக் கொண்டு இருக்கும் போது ஸ்டுடியோ குலுங்கியது கேமராவில் பதிவாகி உள்ளது
கட்டடங்கள் குலுங்கிக் கொண்டிருக்கும் போதே தொடர்ந்து செய்தியாளர் செய்தி வழங்கிக் கொண்டிருக்க, தனியார் தொலைக்காட்சி ஊழியர்கள் அலறி அடித்து வெளியே ஓடினர். பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், ராவல்பின்டி, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.