லெபனானில் பொருளாதார மந்தநிலையை கண்டித்து முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் காவலர்கள் பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.
மேற்கு ஆசியாவில் உள்ள லெபனான் நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. பொதுமக்கள் வங்கிகளில் இருந்து பணம் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமலும் பொதுமக்கள் மிகுந்த இன்னலில் உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினர் வீதியில் இறங்கி போராடினர். பெய்ரூட்டில் உள்ள பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அவர்கள், தடுப்புகளை கடந்து உள்ளே செல்ல முற்பட்டனர்.
போராட்டகாரர்கள் கட்டுக்குள் அடங்காததால், அவர்கள் மீது பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை கூட வாங்க முடியாத நிலையில் ஆட்சியாளர்கள் சொகுசாக வாழ்வதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினரின் போராட்டத்தால் பெய்ரூட்டில் அசாதாரண சூழல் ஏற்பட்டது.