உலகின் மகிழ்ச்சியான நாடான பின்லாந்து, சந்தோஷமாக வாழ்வது எப்படி என்று உலக நாடுகளுக்கு வகுப்பெடுக்க திட்டமிட்டுள்ளது.
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து தொடர்ந்து 6 ஆவது முறையாக முதலிடத்தில் உள்ளது. ஈகை, சுதந்திரம், சுகாதாரம், வருமானம், ஊழலின்மை, சமூக பாதுகாப்பு உள்ளிட்ட 6 காரணிகளின் அடிப்படையில் இப்பட்டியல் தயாரிக்கப்பட்டது.
இதில் தொடர்ந்து 6 ஆவது முறையாக முதலிடத்தில் உள்ள பின்லாந்து, அது குறித்து இலவச முதுநிலை வகுப்பெடுக்க முடிவு செய்துள்ளது. உலக நாடுகளில் இருந்து மகிழ்ச்சியாக உள்ள 10 பேரை விண்ணப்பங்களின் அடிப்படையில் தேர்வு செய்து, 4 நாட்கள் இலவசமாக வகுப்பெடுக்கப்படும் என்று பின்லாந்து அறிவித்துள்ளது.
இயற்கையோடு இணைந்த வாழ்கை முறை, சுகாதாரமான உணவு, மற்றவர்களுடன் பழகும் தன்மை உள்ளிட்ட கருத்துகளை மையமாக கொண்டு இந்த முதுநிலை மகிழ்ச்சி வகுப்புகள் எடுக்கப்பட உள்ளன. ஏரியை ஒட்டி அடர்வனப்பகுதிக்குள் அமைந்துள்ள சொகுசு விடுதியில் இலவசமாக 4 நாட்கள் தங்கி, இந்த வகுப்புகளை பயிலலாம்.
18 வயதை பூர்த்தி செய்தவர்கள், தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதை ஆதாரத்துடன் இதற்கு இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். அதில் தகுதியானவர்களை பின்லாந்து அரசு தேர்வு செய்யும். மகிழ்ச்சியாக உள்ளவர்கள் விருப்பம் இருந்தால், ஏப்ரல் 2 ஆம் தேதிக்குள் இந்த வகுப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.