பாகிஸ்தான் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இயற்கை சீற்றம், உணவு தட்டுப்பாடு, வேலையில்லா திண்டாட்டம் என பல்வேறு பிரச்னைகள் பாகிஸ்தானை நெருக்கடியில் தள்ளியுள்ளது. மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் அத்தியாவசியப்பொருட்கள் விலை கடுமையாக ஏறியுள்ளது. அங்கு ஒரு கிலோ அரிசி 350 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஆரஞ்ச், ஆப்பிள் உள்ளிட்ட பழங்களின் விலையும் கிலோவிற்கு 400 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேப்போல் இறைச்சி வகைகளின் விலையில் விண்ணை முட்டுகிறது. பாகிஸ்தான் மக்களின் பிரதான உணவான, கோதுமைக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் மானிய விலையில் பொது மக்களுக்கு அரசு கோதுமை மாவு வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது. அரசு அமைத்துள்ள மையங்களில் கோதுமை மாவு வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கூட்ட நெரிசலால் அண்மையில் உயிரிழப்புகளும் ஏற்பட்டன.
Food crisis in #Pakistan
People of Peshawar are fighting for a bag of flour 😕😕😕😕#PDM #ImranKhan #Pakistan #KhyberPukhtunkawa pic.twitter.com/2RHvsgW28L
— Fakhar Yousafzai (@fakharzai7) March 28, 2023
இந்த நிலையில், ரமலான் மாதத்தை முன்னிட்டு அரசு சார்பில் இலவச கோதுமை மாவு விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, பஞ்சாப் மாகாணத்தில் ஒரு கிலோ கோதுமை மாவு வாங்குவதற்காக பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டதில், கூட்ட நெரிசலில் சிக்கி 50 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார்.
மாவு வழங்கும் மையங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த மக்களை கடுமையாக தாக்கும் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. காவல்துறை அதிகாரி ஒருவர், பொது மக்களை தாக்கும் காட்சிகள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.