பிறரின் துன்பத்தை தன் துன்பமாக காண்பதே அறிவின் பயன் என்கிறார் திருவள்ளுவர். இந்த குரலுக்கு இலக்கணமாக பிரிட்டன் நாட்டில் ஒரு சிறுவன் சுமார் 3 ஆண்டுகள் வீட்டை துறந்து கூடாரம்(Tent) அமைத்து தூங்கி நிதி திரட்டியுள்ளார். அந்நாட்டின் பாரன்டன் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் மேக்ஸ் வூசி, 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் தனது வீட்டை விட்டு வெளியேறி டென்ட் ஒன்று அமைத்து தங்க ஆரம்பித்தான். இதற்கு காரணம் அந்த சிறுவனின் மறைந்த நண்பர் ரிக் அபாட்.
3 ஆண்டுகளுக்கு முன்னர் அப்போது 10 வயதான மேக்ஸ் வூசியின் சக வயது நண்பர் ரிக் அபாட் புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவருக்கு மேக்ஸ்சின் குடும்பத்தார் துணை நின்று உதவி செய்து வந்துள்ளனர். ஆனாலும், நோய் காரணமாக ரிக் மரணமடைந்துள்ளார். இறக்கும் தருவாயில் ரிக் தனது நண்பர் மேக்ஸ்சிற்கு டென்ட் ஒன்றை பரிசாக தந்துள்ளார். அதை நெகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட ரிக் அப்போது வைராக்கியத்துடன் ஒரு முடிவெடுத்தார்.
வீட்டை துறந்து நண்பர் கொடுத்த டென்ட்டில் தங்கி நிதி திரட்ட வேண்டும். அந்த நிதியை மறைந்த நண்பர் ரிக்கை பார்த்து கவனித்துக்கொண்ட நார்த் டேவோன் ஹாஸ்பைஸ்(North Devon Hospice) என்ற சுகாதார தொண்டு அமைப்புக்கு நன்கொடையாக வழங்க வேண்டும் என முடிவெடுத்தார். அதன் படி தனது 10 வயதில் டென்ட்டில் தங்க ஆரம்பித்த மேக்ஸ் சுமார் 3 ஆண்டு காலம் தொடர்ச்சியாக நிதி திரட்டியுள்ளார். இவரை “The Boy in the Tent” என்று அன்புடன் பலரும் அழைக்க தொடங்கினர்.
இந்த மூன்றாண்டு நிதி திரட்டல் பயணத்தின் மூலம் சுமார் 7.50 லட்சம் பவுண்ட் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 7.6 கோடி ரூபாய் நிதியை இவர் திரட்டியுள்ளார். இந்த தொகை மூலம் சுமார் 500 புற்றுநோயாளிகளுக்கு உதவ முடியும் எனக் கூறப்படுகிறது. சிறுவனின் இந்த பயணம் பல சவால் நிறைந்ததாக இருந்துள்ளது.
கோவிட்-19 பரவல், வெப்பக்காற்று பிரச்சனை, பனிப்பொழிவு, புயல் காற்று போன்ற சவால்களையும் தாண்டி 3 ஆண்டுகாலம் டென்டிலேயே தங்கி இச்சிறுவன் சாதித்து காட்டியுள்ளார். இவரது சாதனையை கின்னஸ் உலக சாதனை அமைப்பு அங்கீகரித்து விருது வழங்கியுள்ளது. இந்த மார்ச் மாதத்துடன் இவரின் இந்த நிதி திரட்டல் பயணம் நிறைவடைந்து, ஏப்ரலில் வீடு திரும்புகிறார் மேக்ஸ்.