அமெரிக்காவில் கடந்த ஏப்ரல் 1, 2-ந் தேதிகளில் புயலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அதன்படி ஆர்கன்சாஸ், இல்லினாய்ஸ் ஆகிய மாகாணங்களை கடந்த வெள்ளிக்கிழமை அடுத்தடுத்து பயங்கர புயல்கள் தாக்கின. கடந்த 2 நாட்களில் மட்டும் அங்கு சுமார் 60 புயல்கள் தாக்கியதாக அந்த நாட்டின் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல்கள் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய மேற்கு மாகாணங்களை பந்தாடின. மணிக்கு பல மைல் வேகத்தில் சுழன்றடித்த சூறாவளி காற்றில் சிக்கி சாலையோரங்களில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தன. ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்தன. பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டது. புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட 8 மாகாணங்களில் பல நகரங்களில் முழுமையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு சுமார் 5 லட்சம் பேர் இருளில் தவித்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புயலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே வருகிற 10-ந் தேதி வரை, இதுபோல் மேலும் பல புயல்கள் தாக்கக்கூடும் என அமெரிக்க வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.