மியான்மரில் 2021-ம் ஆண்டு ஜனநாயக ஆட்சியை கவிழ்த்துவிட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை முன்னெடுத்தனர். மக்களின் போராட்டங்களை ராணுவம் இரும்புக்கரம் கொண்டு அடக்கி வருகிறது. இந்த நிலையில், சகாயிங் மாகாணத்தின் கன்பாலு என்ற இடத்தில் ‘மக்கள் பாதுகாப்புப் படை’ எனும் இயக்கம் அலுவலக திறப்பு விழா நடத்தியது. அந்த விழாவுக்கு 150-க்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்ததாகக் கூறப்படுகிறது.
விழா நடைபெற்றுக் கொண்டிருந்த போது மியான்மர் ராணுவம், அந்தக் கூட்டத்தின் மீது நேரடி வான்வழித் தாக்குதல் நடத்தியிருக்கிறது. ஹெலிகாப்டர் மூலம் துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
மியான்மர் மக்களுக்கு எதிரான தாக்குதலை நிறுத்துமாறு ராணுவத்துக்கு, ஐ.நா பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்டெரஸ் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளும் மியான்மர் ராணுவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளன.