சீனாவில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட கோர தீவிபத்தில் சிக்கி 21 பேர் உடல் கருதி உயிரிழந்தனர். இந்த தீவிபத்தின் பதற வைக்கும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. சீன தலைநகர் பெய்ஜிங் அருகே உள்ள பெங்டாய் என்ற பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் சுமார் 100 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில், நேற்று நண்பகல் 1 மணி அளவில் அந்த மருத்துவமனையில் திடீரென தீப்பிடித்தது. சில நிமிடங்களிலேயே இந்த தீயானது மருத்துவமனை முழுவதும் வேகமாக பரவியது. பதறிப்போன நோயாளிகள், மருத்துவமனை ஊழியர்கள் செய்வதறியாது அங்கிருந்து தப்பிக்கும் முயற்சியில் சுற்றி ஓடினர்.
#BREAKING: At least 21 people dead, 71 patients evacuated following fire at #Beijing Changfeng Hospital, according to Chinese state-controlled media; fire contained#China pic.twitter.com/GttWkrtgbw
— Siraj Noorani (@sirajnoorani) April 18, 2023
சிலர் ஜன்னல் வழியாக மாடியில் இருந்து குதித்தும், வெளியே இருக்கும் ஏசியில் அமர்ந்தும் தீயில் இருந்து தப்பிக்க முயன்றனர். பலர் ஜன்னலுக்கு வெளியே ஆங்காங்கே தொங்கிய கயிறை பிடித்து தப்பி செல்ல முயன்றனர். சிறிது நேரத்தில் தீயணைப்பு படையினர், மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
சுமார் 71 நோயாளிகளை மருத்துவமனையில் இருந்து மீட்டு வேறு இடத்தில் பத்திரமாக சிகிச்சைக்கு அனுமதித்தனர். கோர விபத்தில் சிக்கி 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மருத்துவமனை முழுவதும் தீ பரவி பலரும் தப்பிக்க முயன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. தீவிபத்துக்கான காரணம் குறித்த தகவல்கள் தற்போது வரை வெளியாகவில்லை. விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.