ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக தலிபான்கள் 20 ஆண்டுகளாக போராடி வந்தார்கள். முடிவில் கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியது தலிபான் அமைப்பு. நாட்டைக் கைப்பற்றியதோடு ஆட்சியும் நடத்தி வருகிறார்கள். தலிபான்களின் அரசை ஐநா சபையும் உலகின் பெரும்பாலான நாடுகளும் அங்கீகரிக்கவில்லை.
அங்கீகரிக்கவில்லை என்றாலும் அங்குள்ள பொதுமக்களக்காக பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை ஐநா மற்றம் உலக நாடுகள் வழங்கி வருகின்றன. இதற்காக வளர்ச்சித் திட்டம் ஒன்றையும் ஆப்கானிஸ்தானில் செயல்படுத்தி வருகிறது ஐக்கிய நாடுகள் சபை. அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்களின் உதவியுடன் பொதுமக்களுக்கு தேவையான உணவு, மருந்துப் பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறது ஐநா சபை.
தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் மதரீதியிலான பல்வேறு சட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்தனர். அதில் மிக குறிப்பாக பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. பெண்கள் ஆறாம் வகுப்புகளுக்கு மேல் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் செல்லக் கூடாது என்றும், ஜிம், பூங்காக்கள் உள்ளிட் பொது இடங்களுக்கும் செல்லக் கூடாது எனவும் தடை விதிக்கப்பட்டது. அதோடு பெண்கள் பணிபுரியவும் தலிபான்கள் தடை விதித்தனர். இதற்கு ஆப்கன் பொதுமக்கள் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளும் கணடனம் தெரிவித்து வருகின்றன.
ஆனாலும் தலிபான்கள் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் உள்ளூர் பெண்கள் ஐநாவின் திட்டத்தில் பணியாற்றுவது தடுக்கப்பட்டால் உதவித்திட்டங்கள் வழங்கும் பணிகளை அடியோடு நிறுத்திவிட்டு ஆப்கனை விட்டு வெளியேற நேரிடும் என ஐநா சபை அறிவித்துள்ளது.
தங்கள் பணிகளை நிறுத்திக் கொண்டால் உயிர் காக்கும் அடிப்படை உதவிகள் கிடைக்காமல் பொதுமக்கள் கடுமையான சிரமத்தை சந்திக்க நேரிடும் என ஐநா சாபை தலிபான்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐநாவின் அறிவிப்புக் தொடர்பாக ஆப்கானின் உள்நாட்டு பத்திரிகையான காமா செய்தி வெளியிட்டுள்ளது.
மிகவும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது ஆப்கானிஸ்தான். அதனால் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை உதவிகளை பல சர்வதேச நாடுகளின் உதவியுடன் செய்து வருகிறது ஐக்கிய நாடுகள் சபை. அதனால் தான் அங்கு பொதுமக்களுக்கு தேவையான உணவு, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை உதவிகள் கிடைத்து வருகின்றன. இந்தியாவும் பல ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை, மருந்து பொருட்கள் உள்ளிட்டவற்றை நேரிடையாக ஆப்கானிஸ்தானுக்கு வழங்கியுள்ளது. ஆனால் இவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் மத ரீதியான சட்டத்தை காரணம் காட்டி பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளை செயல்படுத்துவதில் முனைப்பு காட்டி வருகிறது தலிபான்கள் அரசு.