இங்கிலாந்திலும் ஆன்லைன் சூதாட்டத்தை நெறிப்படுத்துவதற்கு கடுமையான விதிகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரிப்பால் ஆன்லைன் சூதாட்ட பிரச்னை உலகம் முழுவதிலும் உருவெடுத்துள்ளது. இங்கிலாந்திலும் ஆன்லைன் சூதாட்டத்தால் நேரும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இதனை கட்டுப்படுத்தும் நோக்கில், இங்கிலாந்து அரசு யாருக்கும் பாதகம் இல்லாத வகையில் சட்டத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஒரு முறை சூதாடுவதற்கு அதிகபட்சமாக 2 பவுன்ட் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 200 ரூபாய் வரை பயன்படுத்த அனுமதி வழங்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு கூடுதல் வரி விதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. சூதாட்டத்திற்கு அடிமையானவர்களை மீட்பதற்கு அந்த தொகையை பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதனை சட்டமாக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.