ஹஜிஸ்தா நூரி முஹம்மட் ஹிராஸ்
சமகாலத்து புலமைப் பெற்ற எழுத்தாளர்களில் ஒருவர் குரு அரவிந்தன் அவர்கள். தனது பல்வேறு விதமான இலக்கியப் படைப்புக்களால் உலகளவில் பிரபல்யம் அடைந்துள்ளதோடு அங்கீகாரமும் பெற்றவர். இவர் யாழ்ப்பாணம் காங்கேஷன்துறை மாவிட்ட புரத்தை பிறப்பிடமாக கொண்டிருப்பினும் தற்போது கனடாவில் வாழ்ந்து வருகிறார். இவர் சிறுகதை, கட்டுரை, நாவல், ஒலிப்புத்தகம் ,மேடை நாடகம், திரைக்கதை போன்று பல துறைகளிலும் சிறந்து விளங்கி இலக்கிய உலகைவலம் வந்துகொண்டிருக்கிறார். ஈழத்துமற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் பலவற்றில் இவரது படைப்புக்கள் களம் பெற்றுள்ளதோடு பல்வேறு பரிசுகளையும், விருதுகளையும் பெற்று சாதனைபடைத்துள்ளவராவார்.
ஒரு சிறுகதையை எப்படி எழுதுவது, என்பதற்கான ஒழுங்கு முறைகளை பின்பற்றி எழுதுகின்ற ஆற்றல் இவரது ஒவ்வொரு சிறுகதைகளிலும் இளையோடிப் போய் இருப்பதை காணக்கூடியதாய் இருக்கின்றது. தெளிந்த நீரோட்டம் போன்று அனாயசமாக கதைகளை நகர்த்திச் செல்லும் ஆசிரியரின் திறனும், சிறந்த மொழி நடையும் பாராட்டத்தக்க வகையில், பல்வேறு பட்ட கருவும், உருவும் கொண்ட கதைகள் தொகுக்கப்பட்டிருப்பதும் வாசகரது ரசனைக்கு நல்விருந்தாக அமைந்திருக்கின்றது. ஒவ்வொரு வாசகரது ரசனையும் வித்தியாசமாக இருந்தாலும் ஆசிரியரின் சிறுகதையின் தரத்தினை வாசகர்கள் ஓரளவு புரிந்து கொள்ள முடியும்.
இவர் எழுதிய சிறுகதைகளில் எனக்கு மிகவும் பிடித்தமானவை… யார் குழந்தை?, தங்கையின்அழகியசிநேகிதி, சிலந்தி, என்செல்லக்குட்டி கண்ணனுக்கு, இதுதான் பாசமென்பதா?, தாயாய்தாதியாய், ஊமைகளின் உலகம், அவளா சொன்னால்?, அவளுக்கு ஒரு கடிதம் , அப்பாவின் கண்ணம்மா…
இந்தவகையில் எழுத்தாளர் திரு.குருஅரவிந்தன் அவர்களுடைய சிறுகதைகள் ஒவ்வொன்றும் சமூகவாழ்வியல் சார்ந்தகுடும்பம் மற்றும் சமூகம் சார் பல்வேறுவிடயங்களை வெளிக்கொணரும் வகையில் கதைக்கருவைக் கொண்டவையாக தோன்றுகின்றன. அந்த வகையில் குரு அரவிந்தன் அவர்களினால் செதுக்கப்பட்ட அவளுக்கு ஒரு கடிதம் , அப்பாவின் கண்ணம்மா, தங்கையின் அழகிய சிநேகிதி , தொடாதே, ஆகிய நான்கு சிறுகதைகளும் பகுப்பு முறை திறனாய்வு அடிப்படையில் இக்கட்டுரையில் நோக்கப்படுகின்றன.
அப்பாவின் கண்ணம்மா .
கணவன் இறந்த பின்னர் மனைவி தனது வாழ்க்கையை நகர்த்திச் செல்லும் விதமே இக்கதையின் கருப்பொருளாக இருக்கின்றது. கதையின் ஆரம்பத்தில் கண்ணம்மா எனும் மனைவியின் பாத்திரத்தை சிடுசிடுப்பான தாயாகவும், மனைவியாகவும் வர்ணித்திருக்கிறார். ஆனால் மனதுக்குள் கடலளவு போல் எல்லையற்றபாசம் அவளுக்கு. பொதுவாக பெண் என்றால் அப்படித்தானே? ஆசிரியர் குரு அரவிந்தன் அவர்களும் உணர்ந்திருப்பார் போலும். மேலும் கணவனுக்கும் மனைவிக்கும் உண்டான காதலை மிக அழகாக, நிஜமாக வர்ணித்து வந்த ஆசிரியர் கதைக்கு ஒரு திருப்பத்தை வழங்குகிறார்.
” பற்றிப்படர்ந்த மரமே பட்டுப் போனால் பாவம் அந்த கொடி என்ன செய்யும் ?” இந்த வசனமானது … என்னை ஆழமாக அழ வைத்தது. நான் எனக்குள்ளே கேட்டுக் கொண்டேன் எனக்கு என்ன ஆயிற்று என்று. அந்த வசனத்தில் ஆயிரம் அர்த்தங்கள் அதை வெறும் கதையாக மட்டுமின்றி உணர்வு பூர்வமாக வாழ்ந்து பார்த்திருந்தால் மட்டுமே தெரியும், ஆசிரியரின் உணர்வுகள்…. அவர் கதையை நகர்த்திய விதம் அடுத்தடுத்து வரும் திருப்பங்கள் என்னை அழ வைத்துக் கொண்டே இருந்தது. “அப்பாவின் கடைசி ஆசையை நிறைவேற்றாமல் போய் விட்டேனடி பாரதி.” ……என்ற கண்ணம்மாவின் அழுகுரல் என் கண் முன் விழித்தாடியது. அப்பா இறந்த பிறகும் அம்மாவிற்கு தோழியாக நின்று அவளை கட்டியணைத்து ஆறுதல் கூறும் பக்குவம் நிறைந்த மகளாய் பாரதி என்னும் கதாபாத்திரத்தை வர்ணித்தது இந்த கதைக்கு ஓர் ஆறுதலாய் இருந்தது. கண்ணம்மா தனது கணவரை மட்டும் காதலிக்கவில்லை, அவருடைய எழுத்துக்களையும் தான். அவரது படைப்புக்குளோடு எந்தளவுக்கு ஆர்வமும் மரியாதையும் இருந்திருந்தால் அவரது ஒவ்வொரு எழுத்துக்களையும் தாரக மந்திரமாக ஏற்று தனது வாழ்க்கையை நகர்த்திச் சென்று இருப்பாள். பொதுவாக பெண்கள் கணவன் இறந்த பிறகு பூ பொட்டு கலைவது என்பதே நிதர்சனமான உண்மை. ஆனால் ”மனைவி இறந்தால் கணவன் எதையும் துறப்பதில்லை கணவன் இறந்தால் மட்டும் ஏன் மனைவி பூவும் பொட்டும் துறக்கணும் ஏன் இந்த பாரபட்சம்? ஏன் இந்த நீதி?’‘ என்ற அப்பாவின் எழுத்துக்கள், ஒவ்வொன்றாக கண்ணம்மாவின் உருவத்தில் உயிர் பெற்று நின்றது. இக்கதையில் ஆசிரியர் சமூகத்துக்கு ஒரு கருத்தை சொல்லாமல் சொல்லி இருக்கிறார். மிகவும் சுவாரஸ்யமாக கதையை நகர்த்திச் செல்லும் ஆசிரியர் அடுத்தடுத்து ஒவ்வொரு திருப்பங்களையும் கொண்டு வருகிறார்.
பாரதிக்கு ஒரு அதிர்ச்சி இருந்தது. அப்பா எழுதிய “கணவனை இழந்த இளம் பெண் மறுமணம் செய்து புது வாழ்வு ஆரம்பிப்பதாக” என்ற கதை அவளது கைகளுக்கு கிடைத்தது. ஒரு கணம் அதிர்ச்சி அடைந்து விட்டேன் நானும் கூட , பாரதி போல். கண்ணம்மாவின் கைகளுக்கு கிடைத்து விடக்கூடாது என்ற பரபரப்புடனையே கதையில் வாழ்ந்து கொண்டிருந்தேன்.கதையின் இறுதியில் பாரதிக்கோ குழப்பமும், தெளிவின்மையும், ஆனால் ஒரு வாசகராய் எனக்கோ மிகுந்த பேரின்பம்.
“என் அம்மா அப்பாவின் கண்ணம்மாவாக இருக்க வேண்டும்’’ என்று இக்கதையில் பாரதி எடுத்த முடிவு மிகவும் கச்சிதமானது
என் கருத்துப்படி, இதன்முடிவை எல்லா வாசகர்களும் திருப்திகொள்ள மாட்டார்கள். இக்கதையில் பாரதியாக வாழ்ந்திருந்தால் மட்டுமே தெரிந்திருக்கும் ஆசிரியரின் உணர்வுகள். ‘’அப்பாவின் கண்ணம்மா’’ என்ற தலைப்பை நான் ஆரம்பத்தில் வாசிக்கும் போது அப்பாவுக்கும் மகளுக்கும் இடையிலான ஒரு கதையாக அமையக்கூடும் என எண்ணியிருந்தேன். கதையின் இறுதியிலேயே உணர்ந்து கொண்டேன், அந்த தலைப்பில் உள்ள காதல் மயக்கத்தை.
ஒரு சிறுகதைக்கு அதன் மொழி உயிரோட்டம் தருவது எவ்வளவு உண்மையோ அதுபோல கதையில் வரும் பாத்திரங்கள் அந்த மொழிநடையை காவிச்சென்று மனதில் நீங்காத இடத்தை பிடித்துவிடுகின்றன. சிறுகதைகள் பொதுவாக தனிமனித உணர்வுகளை அல்லது ஒரு பிரச்சினையை கணநேரத்தில் சொல்லி முடிக்கவேண்டும். பாத்திரங்களும் வளர்க்கப்படாது வார்க்கப்பட வேண்டும். குரு அரவிந்தனின் சிறுகதைகளில் வரும்பாத்திரங்களும் அப்படியானவையே. உதாரணமாக “அப்பாவின் கண்ணம்மா” என்னும் சிறுகதையில் அப்பா , அம்மா, மகள் இவர்களின் கதாபாத்திரங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றது.
இரண்டாவதுகதை “தங்கையின்அழகியசிநேகிதி”
தங்கையின் சிநேகிதி மீது கொண்ட அண்ணனின் காதல் ஒரு தலை காதலாகி விடுமோ என்ற எண்ணத்திலேயே வாசிக்கும் போது மிகவும் விறுவிறுப்பான ஒரு முடிவை வழங்கி இருக்கிறார் ஆசிரியர். அண்ணனுக்கும் தங்கைக்கும் இடையே ஏற்படும் சண்டைகள் சாதாரணமே. ஆனால் அவர்களின் மனதில்உள்ளகோபங்களையும்வெறுப்பையும்யார்அறிவர்?. அண்ணனுக்கு தங்கையின் சிநேகிதி மீது ஒருவகையான சொல்ல முடியாத உணர்வுகளைக் காதலாக வெளிப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர். அவளிடம் எப்படியாவது பேசிட வேண்டும் என்று எண்ணியிருந்த அவனுக்கு அந்த குறுகிய நேரத்தில் அவன் எண்ணிய திட்டங்கள் அனைத்தும் வீணாகியே போய்விட்டன. ஆனால் அவனுக்கு அவள் எதையோ தன்னிடம் கூற முற்படுகிறாள் என்ற எண்ணமே.
ஒரு தலை காதலாக எண்ணிய அவனும் அவளுடைய மனதில் இருப்பதை அறிந்திருந்தால் தலைகால் தெரியாமல் ஆடியிருப்பான் போலும். “காற்றடித்து கலையாத உன் முடிக்குள் என் விரல் நுழைத்து களைத்து விட ஆசை“ , என்ற வரிகளில் ஊடாகவே ஆசிரியர் விளக்கியிருக்கிறார், அவளுக்கும் அவன் மீதான ஆசையை. தங்கைக்கும் எந்த அளவுக்கு வெறுப்பும் கோபமும் இருந்திருந்தால் தனது சிநேகிதி தன் அண்ணனுக்கு எழுதிய கடிதத்தை மறைத்து வைத்திருப்பாள். இறுதியில் இருவரது காதலும் ஒரு தலை காதலாகவே போய்விட்டதா அல்லது அவர்களது காதல் மலருமா? என்ற வினாவுடனயே இக்கதையை வாசகர்கள் பார்வைக்கு வழங்கி இருக்கிறார் ஆசிரியர்.
முடிவு முடிந்துவிடாமல் மீண்டும் தொடர்வதாகவும் திருப்புமுனையுடன் கூடியதாகவும் வாசகர்களது எண்ணத்திற்கு படைப்பது சாலச்சிறந்தது.
மூன்றாவதுகதை “அவளுக்குஒருகடிதம்”
காதலை எப்படியாவது சொல்லி விட வேண்டும் என்ற தயக்கத்திலேயே தவித்திருக்கும் சுரேஷிற்கு ஓர் சந்தர்ப்பமாய் அமைந்தது அந்த காதலர் தினம். தனது காதலையெல்லாம் அந்த வேலன்டைன் காடில் கொட்டித்தீர்த்தான். ஏதோ ஒரு உத்வேகத்தில் அந்தக் காடை அவளிடம் கொடுத்துவிட்டு ஏங்கி நின்றான், அவளது சம்மதத்திற்காக. சம்மதத்திற்காக ஏங்கித் தவித்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும் ஆசிரியரினுடைய வரிகளின் வலிகள்.அடுத்தது என்ன நடக்கும் என்ற பதட்டத்துடனே வாசித்தேன்.
அவளது புன்னகையும், அவளது பார்வையும் காதலுக்கு சம்மதமாகத்தான் இருந்தது. சுரேஷிற்கு தலைகால்புரியவில்லை.இருப்பினும் அடுத்த நாள் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. சுரேஷ் அதிபரின் அறைக்கு அழைக்கப்பட்டான். அதிபருடைய வார்த்தைகளோ சம்மதத்தை சொல்லாமல் சொல்வது போல் இருந்தது. ஆனால் சுரேஷிற்கு புரியவில்லை, அவனது வயது அப்படி. அருந்ததியின் மீதான கோபமே அவனை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது .வழியில் காத்திருந்த அருந்ததியிடம் தனது கோபத்தை வெளிப்படுத்துகிறான். அவளுக்கும் அவன் மீது காதல் தான் , இது அவள் எதிர்பாராதது தான்.அப்பா கோபமாக பேசினாரா என்று அவள் கேட்க, அவனும் நடந்தது எல்லாம் கூற , “நம் நல்லதிற்காகத்தானே கூறியிருக்கிறார்” என்ற அந்த வார்த்தை சுரேஷின் கோபத்தை சுக்கு நூறாக்கியது. ஆசிரியர் அவர்களது காதலை மலர வைத்து விடுகிறார் . சுரேஷ் ஞாபகார்த்தமாக ஏதாவது தா? என்று கேட்க அவளோ முத்தத்தை வழங்க அந்த காதலை எவ்வளவு அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர்.
காதல் எவ்வளவு பேரின்பமானது. காதலனோ காதலியோ பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் தேன் அமிர்தம் போன்றிருக்கும். என்னவோ தெரியவில்லை என்னவனே நான் அளவுக்கு அதிகமாக நேசித்ததாலோ தெரியவில்லை, குரு அரவிந்தன் அவர்களின் காதல் சிறுகதைகள் அனைத்தும் என்னை ஆக்கிரமித்துக் கொண்டே இருக்கின்றது.
இவர் எழுதிய ஒவ்வொரு கதைகளையும் எடுத்துநோக்கும் போது சிறுகதை எழுதுவது எப்படி என்பதுபற்றி பல எழுத்தாளர்கள் குறிப்பிடுவதுபோல் கதைத்தலைப்பிலிருந்தே கதையின் கருப்பொருளை உணரக்கூடியதாகவும் அந்தக் கதைகளை உடனடியாக படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுவதாகவும் கதையின் தலைப்புக்கள் மிகச் சிறப்பானதாகவும் பொருத்தமுடையதாகவும் ஒவ்வொருகதைக்கும் தேர்வுசெய்து சூட்டியிருக்கிறார்.
சிலஎழுத்தாளர்களின்சிறுகதையில்அவர்களதுகதையின் கருப்பொருளுக்கும் கதைத் தலைப்புக்கும் சம்பந்தமே இல்லாமல் தலைப்பிடுவார்கள்.ஆனால்இவருடையகதைகளில் அப்படிஒருநிலைமையை காணமுடியவில்லை. கதைத் தலைப்புக்கள் கதையின் இறுதிவரைநினைவில் நிற்கும் படியாக ஒவ்வொருகதையின் கருவுடனும் பின்னிப் பிணைந்து இறுதிவரைநகர்கிறது.
நான்காவதுகதை “தொடாதே“
“பணத்தால் எதையும் வாங்கலாம்” என்று ஆணவத்தோடு இருப்பவர்களுக்கு சமர்ப்பணமாக எழுதி இருக்கிறார்,எழுத்தாளர் “குரு அரவிந்தன்“ ஆசிரியர் அவர்கள். அவன் ஒரு டென்னிஸ் விளையாட்டு வீரன். பெண்களை கவரும் தோற்றமுடையவன். கதையில் வரும் கதாநாயகியான “ஜெஸ்மின் ” என்ற அவளும் அவனுடைய தோற்றத்தில் கவர்ந்தவளாகவே சித்தரித்திருந்தார் ஆசிரியர். கதையின் ஆரம்பம் காதல் போன்று நகர்ந்தாலும் முடிவோ வாசகர்கள் எதிர்பாராததாக வருணித்திருந்தார். கதையை வாசிக்கும் போது அவனுடன் அவள் நெருங்கும் விதம் காதலின் ஆரம்பமாகத்தான் தென்பட்டது. ஆனால் அந்த எண்ணத்தை எல்லாம் உடைத்து விடுவது போல் ஆசிரியர் “ட்விஸ்ட்” ஒன்றை வைத்திருந்தார்
அவன் அவளை ரூமுக்கு அழைத்துச் சென்று அவளோடு நடந்து கொண்டு விதத்தை வாசிக்கும் போது சற்று முகஞ்சுழிக்கக் கூடியதாய் இருந்தது.பின்னர் தான் அறிந்து கொண்டேன் கதையின் திருப்பத்தை. அவன் செய்த காரியத்தை எண்ணி மனம் வருந்துவான் என்று எண்ணி இருந்த அவளுக்கு அவனுடைய பார்வையும், நடவடிக்கையும் அவளுக்கு மேலும் கோபத்தை வளர்த்தது. இனி அவள் எனக்கு அடிமையாகத்தான் இருப்பாள் என எண்ணி இருந்த அவனுக்கு அவளது கதையில் உள்ள திமிரையும் கோபத்தையும் கண்டு சற்று பயந்து நின்றான். ஜெஸ்மின் தனது வாழ்க்கை கதையை அவனுக்கு கூறும்போது அவள் ஏற்கனவே அவனால் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்பதை கதாசிரியர் வாசகர்களோடு அணுகி இருக்கிறார்.
இப்பொழுதுதான் “என்னுடைய வலைக்குள் சிக்கி விட்டாய்” என்று ஜெஸ்மின் கூறியவுடன் “வலையில் சிக்கியது நீயா? நானா?*” என்று கேலியாக கேட்க அங்கு அவளுடைய உடல்நிலை கூறப்படுகின்றது. காசு, பணம், சொத்து, புகழ் இவை அனைத்தும் வைத்துக் கொண்டு எத்தனையோ பெண்களையும் ஏழைகளையும் ஏமாற்றிய டென்னிஸ் வீரனுக்கும் இதுபோன்ற எமது சமூகத்தில் உள்ள இங்கிதப் பிறவிகளுக்கும் பதிலடி கொடுக்கும் விதமாக கதையினில் ட்விஸ்ட் வைத்திருக்கிறார் ஆசிரியர்.
ஜெஸ்மின் கார் விபத்து ஒன்றில் சிக்கிய போது இரத்த தேவை ஏற்பட எயிட்ஸ் நோயாளியின் இரத்தம் வழங்கப்பட்டிருந்தது. இதைக் கேட்ட அவன் என்ன செய்வதறியாது மரண பீதியில் நின்றிருந்த அந்த காட்சியை வாசகர் கண்முன் கொண்டு வந்திருக்கிறார் ஆசிரியர். ” பணமிருந்தால் எதையும் சாதிக்கலாம் என்று துணிந்து நின்றியே தற்பொழுது உனக்கிருக்கும் எயிட்ஸ் நோய்க்கு மருந்து வாங்கிக் கொள்’’ என்ற அவளது கர்வமான வீரமான பேச்சு ஒரு வாசகராய் எனக்கு பெரும் திருப்தியை அளித்தது . எமது உலகம் மாற வேண்டும் பணத்தை வைத்துக் கொண்டு ஆடும் ஆட்டம் அடங்க வேண்டும்.
“குரு அரவிந்தன்” ஆசிரியர் அவர்களே, இதுபோன்ற சமூகத்திற்கு விழிப்புணர்வான / அத்தியாவசியமான கதைகளை நீங்கள் எழுதவேண்டும் என்று பணிவோடு கேட்டுக் கொள்வதோடு ஒரு வாசகராய் இது போன்ற உங்களது கதைகளுக்கு என்றும் நான் ஆதரவளிப்பேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் ஆசிரியர் அவர்களே.
இந்த நான்கு கதைகளும் வாசகர்களுக்கு புரியும் படியான இலகுவான இலக்கண முறைமைகளில் எழுதி இருப்பது பாராட்டத்தக்க வகையானது. எல்லா நாடுகளிலும் உள்ள வாசகர்கள் இலகுவாக இவருடைய படைப்புகளை உணர்வு பூர்வமாக வாசிக்க முடியும் என்பதை நான் தெரிவு செய்த நான்கு கதைகளினூடாகவே அறிய முடிகின்றது. பாத்திரங்களுக்கிடையிலான சம்பாசனைகளும் கூட இலகுவான இலக்கண முறை வழக்கிலேயே கையாளப்பட்டிருக்கிறது.
எனது ஆய்வின் அடிப்படையில் நான் தேர்வு செய்து இந்நான்கு கதைகளிலும் ஆசிரியர் கூற விளைந்த மையக்கருத்து தலைப்பிற்கு பொருத்தமானதாகவே இருந்தது. அதேபோன்று ஒரு சிறுகதை எழுதும் போது அது நான்கு அல்லது ஐந்து பக்கங்களுக்குள் எழுதிவிட வேண்டும் என்பது எழுத்தாளர்களின் ஒரு ஆய்வு. அது உண்மையும் கூட.
இங்கு குரு அரவிந்தன் அவர்கள் மிகவும் கச்சிதமாக தனது கதையை நான்கு அல்லது ஐந்து பக்கங்களுக்குள் எழுதி இருப்பது பாராட்டத்தக்கது. மேலும் கதையில் தேவையற்ற கதாபாத்திரங்களும் இன்றி எந்த ஒரு குழப்பமும் இன்றி தெளிந்த நீரோட்டம் போன்று ஆரம்பம் தொடக்கம் முடிவு வரை மிக நேர்த்தியாக தனது சிறுகதையைப் படைத்திருப்பது அருமையே.
அதே போன்று அவரது மொழி நடையும் மிக இலகுவான இலக்கண முறையில் இருப்பதனால் எல்லா வாசகர்களது பார்வைக்கு இவருடைய சிறுகதை போய் சேரும் என்பது நிஜமே. கதாசிரியரினுடைய சிறுகதைகள் அனைத்தும் இலகுவான இலக்கண முறையில் எழுதி இருப்பதை ஒட்டி நானும் இத்திறனாய்வை இலகுவான இலக்கணத்திலே எழுதி இருக்கிறேன். மேலும் ஏதாவது எதிர்மறையான விடயம் ஒன்றை கூற வேண்டும் என்றால் சற்று கடினமே. சிறுகதையில் எதிர்பாராத கதாபாத்திரத்தை கொண்டு வந்திருந்தால் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்க கூடும் என்பது எனது சிறு எண்ணம்.
பொதுவாக நான் படித்த ஏனைய கதைகளையும் வைத்துப் பார்க்கின்றபோது இவரதுகதைகள் யாவும் சிறப்பாகவேஅமைந்திருக்கின்றன. வளர்ந்துவரும் எழுத்தாளர்களுக்கு முன்னோடியாக இருக்கும்,இவர் மேலும் பலபடைப்புக்களை தமிழ் இலக்கியஉலகிற்கு தரவேண்டும் என ரசிகையாய் கேட்டுக்கொள்கிறேன்.
குரு அரவிந்தன் ஆசிரியர் அவர்கள் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் என்று இறைவனை பிராத்தித்தவளாக என்னுடைய இத் திறனாய்வை நிறைவு செய்கின்றேன்.
குரு அரவிந்தன் வாசகர் வட்டம்
சிறுகதைத் திறனாய்வுப் போட்டி-2023, முடிவுகள்
1ஆம்பரிசு முகம்மது நூர்தீன் பாத்திமா றிஸாதா
ரூபா 30,000 காத்தான்குடி-06 இலங்கை
2ஆம்பரிசு ஜூனியர் தேஜ், வரதராஜன்
ரூபா 25,000 சீர்காழி, தமிழ்நாடு
3ஆம்பரிசு ஹஜிஸ்தா நூரி முஹம்மட் ஹிராஸ்
ரூபா 20,000 காத்தான்குடி-5 இலங்கை
4ஆம்பரிசு பர்வின் பானு. எஸ்
ரூபா 15,000 தேனாம்பேட்டை, சென்னை
5ஆம்பரிசு கலாதர்ஷினி குகராஜா
ரூபா 10,000 நுஹேகொடை, இலங்கை
20 பாராட்டுப் பரிசுகள் – தலா ரூபா 5000
1. திருப்பதி. தீ, புதுக்கோட்டை, தமிழ்நாடு
2. அருள் சுனிலா.ஜா, சகோ.(முனைவர்) பெரியகுளம், தேனி
3. ஏழுமலய். சொ, (முனைவர்) புதுச்சேரி – 5, இந்தியா
4. அனுதர்ஷினி சந்திரசேகர், மெசன்ஜர் வீதி, கொழும்பு
5. சந்தனமாரியம்மாள்.கோ,(முனைவர்)கோவில்பட்டி, தூத்துக்குடி.
6. அம்பிகா வாசுதேவன், ரொசெஸ்ரர், நியூயோர்க்.
7. வேல்முருகன். த, கோவில்பளையம், ஈரோடு
8. ரகுநாதன். டி. எஸ், நேதாஜி நகர், கோயம்புத்தூர்
9. சுப்ரபாரதி மணியன், பாண்டியன் நகர், திருப்பூர்.
10. சந்திரன் வேலாயுதபிள்ளை, மார்க்கம், கனடா
11. பொரவியா பிள்ளை புஷ்பராஜூ,கொழும்பு-15, இலங்கை
12. மணிமேகலை. பா, லாசப்பெல், பிரான்ஸ்
13. ஸ்ரீகந்தநேசன்.பெ. யாழ்ப்பாணம், இலங்கை
14. இலக்கியா மாதவன், மெல்பேர்ன், அவுஸ்ரேலியா
15. ஹரண்யா பிரசாந்தன், மட்டக்களப்பு இலங்கை.
16. சோபிதா குணேஸ், சண்டிலிப்பாய், இலங்கை
17. மோனிஷா.நா, வடுகபட்டி, ஈரோடு
18. நித்திய ஜோதி, பண்டாரவளை, இலங்கை
19. மேகநாதன் .பெ, போடிநாயக்கனூர், தேனி
20. பவானி சச்சிதானந்தன், வத்தளை, இலங்கை.
வணக்கம். திறனாய்வுப் போட்டி – 2023. வாசிப்பு, எழுத்துத் துறைகளை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு நடந்த போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் எமது பாராட்டுக்கள். பதினொரு நாடுகளில் இருந்து 119 கட்டுரைகள் வந்திருந்தன. எல்லாக் கட்டுரைகளுமே தரமாக இருந்ததால் இறுதிச் சுற்றுக்கு மதிப்பெண்களின்படி 25 கட்டுரைகள் தெரிவாகின. நடுவர்களாகப் பணியாற்றிய ஊடகவியலாளரும் எழுத்தாளருமான ஆர். என். லோகேந்திரலிங்கம், திறனாய்வாளர் திருமதி வாசுகி நகுலராஜா, கவிஞர் மு. முருகேஷ், தமிழ்நாடு. ஆகியோருக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். பரிசுத் தொகை காலக்கிரமத்தில் அனுப்பி வைக்கப்படும்.
சுலோச்சனா அருண்
செயலாளர், குரு அரவிந்தன் வாசகர் வட்டம்.
kurufanclub@gmail.com