வீட்டை கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார் என்ற பழமொழி இன்றை காலகட்டத்திலும் நமது சமூகத்திற்கு பொருத்தமான ஒன்று என்றே கூறலாம். காரணம், இன்றைய காலத்திலும் ஒரு நபர் தனது வருவாயில் பெரும் பகுதி பணத்தை சொந்த வீடு என்ற கனவிற்கும், திருமணத்திற்கும் தான் செலவிடுகின்றனர்.
அப்படித்தான், லட்சம் கோடி ரூபாய்களை செலவு செய்து வீடு வாங்கும் மக்களுக்கு மத்தியில் ஒரு பெண் ஒரு யூரோ அதாவது வெறும் 90 ரூபாய்க்கு வீடு வாங்கி அதை கோடிக்கணக்கான மதிப்பிலானதாக மாற்றியுள்ளார். இத்தாலி நாட்டின் சிசிலி பகுதியில் 17ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட வீடுகள் ஏலத்திற்கு வந்துள்ளன. இந்த வீடுகளை ஒரு யூரோ, ஒரு வீடு என்ற திட்டத்தின் கீழ் இத்தாலிய அரசு ஏலமிட்டது.
இந்த திட்டத்தை பயன்படுத்தி அமெரிக்காவில் வசிக்கும் இத்தாலிய பெண் Meredith Tabbone என்பவர் பலே திட்டமிட்டார். இந்த சிசிலி பகுதியில் உள்ள கிராமத்தில் தான் பெண் மெரெடித்தின் கொள்ளு தாத்தா வளர்ந்து வாழ்ந்துள்ளார். அங்கு 750 சதுரடி அளவிலான ஒரு வீடு சொத்து ஏலத்திற்கு வந்துள்ளது. அந்த வீட்டில் மின்சாரம், தண்ணீர், ஜன்னல் கதவுகள் போன்ற வசதிகள் இல்லை.
இருப்பினும் இதை ஒரு யூரோ அதாவது ரூ.90 மட்டுமே கொடுத்து 2019இல் ஏலம் வாங்கினார் மெரெடித். அத்துடன் நிற்காமல் அருகே உள்ள வீட்டையும் ரூ.27 லட்சத்திற்கு வாங்கி இரண்டையும் இணைத்து 3000 சதுரடி வீடாக மாற்றி புணரமைக்க தொடங்கியுள்ளனர். இதற்காக சுமார் இரண்டு ஆண்டுகள் முயற்சி எடுத்து ரூ.2.35 கோடி செலவு செய்துள்ளார்.
புதிதாக புணரமைக்கப்பட்ட வீட்டில் பெரிய வசிப்பிடம், 4 படுக்கை அறைகள், 4 குளியல் அறைகள், சமையல் அறை, டைனிங் அறை ஆகியவற்றை உருவாக்கியுள்ளார். இப்போது இந்த புதிய வீட்டின் மதிப்பானது ரூ.4.10 கோடியாக உள்ளது. 750 சதுர அடியை வெறும் 90 ரூபாய்க்கு வாங்கி அதை புணரமைத்த பெண்ணின் சாமர்த்தியத்தை பலரும் இணையத்தில் பாராட்டி வருகின்றனர்.