பாகிஸ்தானில் ஊழல் செய்ததாகவும், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது 150க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் வழக்கு ஒன்றில் ஜாமீன் கோரி இஸ்லாமாபாத் நீதிமன்றத்துக்கு அவர் வந்தார். அந்த நேரத்தில் நீதிமன்ற வளாகத்தில் புகுந்த ராணுவத்தினர் இம்ரான் கானை கைது செய்து அழைத்துச் சென்றனர். அப்போது இம்ரான்கானுக்கும் அவரின் வழக்கறிஞருக்கும் காயம் ஏற்பட்டது.
கராச்சியில் குவிந்த இம்ரான் கான் ஆதரவாளர்கள் சாலைகளில் வாகனங்கள், கார்கள் மற்றும் கண்ணில் படும் பொருட்களை எல்லாம் தீயிட்டு கொளுத்தி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். லாகூரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, தண்ணீரை பீய்ச்சி அடித்து காவல் துறையினர் விரட்டியடித்தனர்.
பெஷாவரில் இம்ரான் கானின் PTI கட்சி தொண்டர்கள் காவல்துறை வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதனால் அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது. கலவரத்தில் ஈடுபட்டவர்களை விரட்டி சென்று காவல்துறையினர் கைது செய்தனர். காவல்துறையினர் நடத்திய கண்ணீர் புகை குண்டும் மற்றும் துப்பாக்ச்சூடு தாக்குதல்களில் காயமடைந்த ஏராளமானோர் ஆம்புலன்ஸ்களிலும் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
ராவல்பிண்டி, இஸ்லாமாபாத்தில் கலவரத்தில் ஈடுபட்ட இம்ரானின் ஆதரவாளர்கள் பொது சொத்துகளையும் ராணுவ தலைமையகத்தையும் அடித்து உடைத்தும், சாலையின் நடுவே டயர்களை தீவைத்து எரித்தும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பாகிஸ்தான் வானொலியின் அலுவலகத்திற்குள் புகுந்த இம்ரானின் ஆதரவாளர்கள் அந்த கட்டடத்துக்கே தீவைத்தனர்.