கனடாவிலிருந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர் நிமால் விநாயகமூர்த்தி அழைப்பு
நமது அடுத்த சந்ததியினருக்கு இன்னுமொரு முள்ளிவாய்க்கால் அவலம் நடக்க விடமாட்டோம் என்ற திடசங்கற்பத்துடன் முள்ளிவாய்க்கால் அவலத்தை நினைவு கொள்வோம். மக்களும் தேசங்களும் மகிழ்வின்போது ஒன்றிணையும் கணங்களைவிட, மனத் துயரின்போது ஒன்றிணையும் கணங்களே மிகவும் கனதியானவை, வலிமையானவை. வரலாற்றுக் கூட்டுநினைவாக, மகிழ்வின் கணங்கள் இருப்பதனைவிட, துயரின் கணங்களே மிகவும் அவலமானவை, ஆழமானவை. எனவே முள்ளிவாய்க்கால் இனவழிப்பில் தம்முயிர் ஈந்தவர்களின் நினைவுடன், தமிழீழ தேசத்தின் விடுதலைக்காகத் தொடர்ந்து ஓயாது உழைப்போம் என உறுதி எடுத்துக் கொள்வோம்.
இவ்வாறு கனடாவிலிருந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர் நிமால் விநாயகமூர்த்தி அழைப்பு விடுத்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவு நாள் தொடர்பாக விடுத்துள்ள செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:_
தமிழர் வரலாற்றில் முக்கிய கூட்டு நினைவாக அமையும், மே 18 துயர் தினத்தை நினைவு கூர்வதும், அஞ்சலி செலுத்துவதும் ஈழத்தமிழர்களின் கட்டாயக் கடமையாகும். முள்ளிவாய்க்கால் என்பது தமிழின அழிப்பின் ஒரு சாட்சியமாகும். மே 18 2023 முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் பதின்நான்காவது ஆண்டு நினைவு நாள். பல்லாயிரக்கணக்கான மக்களை, மாவீரர்களை, தமிழர் தேசங்களை இழந்த துயர்தோய்ந்த நாள். ஈழத்தமிழர்களுக்கு எதிராகச் சிங்களம் புரிந்த இனப் படுகொலையின் இரத்த சாட்சியம் இந்த முள்ளிவாய்க்கால்.
நமது மக்கள் வாழ்வே போராகவும், போரே வாழ்வாகவும் வாழ்பவர்கள். எந்த ஒரு நெருக்கடியிலும் எமது விடுதலை வேட்கை குறையாமல் தமிழீழ மண் மீட்பில் தொடர்ந்து பயணித்தவர்கள். இன அழிப்பின் பின்னரும் எமது இறைமையை மீட்பதற்கு உரிமைக்குரல் எழுப்பி வருபவர்கள். தமிழர் தேசத்தின் விடுதலைக்காக ஆகுதியானவர்களையும், மக்களையும் மனதில் நிறுத்தி உறுதிபூணும் நாளிது. அவர்களின் தியாகத்திற்கான காணிக்கை செலுத்த வேண்டிய பொறுப்பு, நம் அனைவருக்குமுண்டு. அவர்களின் தியாகம் வீணாகாவிடாமல் பாதுகாப்பதற்காக, நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வதுதான், அவர்களுக்கான உண்மையான அஞ்சிலியாகும். அஞ்சலித்தல் என்பது, செயலுக்கான உரம் என்பதை மனதில் நிறுத்த வேண்டிய நாளிது. முள்ளிவாய்க்கால் நினைவுநாளான மே 18 யை தமிழீழ தேசிய துக்க நாளாக அனுஷ்டிப்பது, எமது தமிழீழ தேசிய உயிர்ப்புணர்வை வலுப்படுத்தும் ஒரு நிகழ்வாக அமைகிறது.
தாயகத்தின் ஜனநாயக வழிப் போராட்டங்கள், ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஊடான அழுத்தங்கள், சர்வதேச சமூகத்தின் கரிசனைகள் – எனப், பல்வேறு விடயங்கள் இந்தக் காலப்பகுதியில் இடம்பெற்றிருக்கின்றன. எனினும் நாம், நமது மக்களுக்காக எதிர்பார்த்த சுதந்திர வாழ்வை நெருங்குவதற்கான நம்பிக்கை இப்போதும் மங்கலாகவே இருக்கின்றது. எமது மக்களிள் வாழ்வை சூழ்ந்து அச்சுறுத்தும் சிங்கள-இருள் சிறிதும் அகலவில்லை.
தமிழர் தேசித்தின் கிழக்கு மாகாணத்தை திட்டமிட்டு ஆக்கிரமித்து, எமது மக்களை அரசியல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் சுற்றிவளைத்துக் கொண்ட சிங்களம், தற்போது வடக்கு மாகாணத்தினை இலக்கு வைத்து வேகமாக நகர்கின்றது. தினமும் புத்தர் சிலைகளும், விகாரைகளுமே செய்திகளாகின்றன. மிகவும் திட்டமிட்ட வகையில், தமிழர் தேசத்தை பௌத்த மயமாக்கும் செயற்பாடுகள், எமது மக்களின் எதிர்ப்பையும் மீறி, தொடர்ந்தும் அரங்கேறிக்கொண்டிருக்கின்றது. இலங்கை ஒரு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குப்பட்டிருக்கின்றது. இதன் விளைவாக தென்னிலங்கை அரசியல் சீர்குலைந்திருக்கின்றது. சிங்கள அரசிற்கு எதிராக சிங்கள மக்களே கிளர்தெழுந்தனர்.
சிங்கள – பௌத்த தலைவனாக தன்னை பிரகடணம் செய்திருந்த, 69 லட்சம் சிங்கள மக்களின் ஆதரவுடன் அதிகாரத்தை கைப்பற்றியிருந்த, கோட்டபாய ராஜபக்ச சிங்கள கிளர்சியின் மூலம், வெளியேற்றப்பட்டிருக்கின்றார் – இவ்வாறான நிகழ்வுகள், இலங்கைத் தீவு முன்னோக்கி பயணிக்கலாம் என்னும் நம்பிக்கை நம்மில் பலரிடம் ஏற்படுத்தியிருந்தது. ‘அரகலய’ என்னும் சிங்கள மக்கள் கிளர்ச்சியினால், சிங்கள – பௌத்த தேசியவாதம் வீழ்ச்சியடைந்துவிட்டதாகவும், சிங்களத் தேசியவாதம் அதன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதாகவும்; கூட, உரையாடல்கள் இடம்பெற்றன. ஆனால் சிங்கள பெருத்தேசியவாத தமிழர்-விரோத ஒடுக்குமுறைப் பண்பில், சிறிய மாற்றம் கூட ஏற்படவில்லை.
மறுபுறம் இது நமது தேசத்திற்கு ஒரு உண்மையை வெளிப்படுத்தியிருக்கின்றது. அதாவது, சிங்கள-பெருந்தேசியவாத கட்டமைப்பானது, யார் ஜனாதிபதியாக வருகின்றார், எந்தக் கட்சி ஆட்சியிலிருக்கின்றது என்பவற்றுடன் தொடர்புபட்டதல்ல, மாறாக அது ஒரு சிங்கள சிந்தனை முறையாகவே வளர்சியடைந்திருக்கின்றது – அந்த சிந்தனை முறையின் நீட்சியாகவே சிங்கள நிர்வாகம் அமைந்திருக்கின்றது.
இந்த பின்னணியில், சிங்கள அரசியல்கட்டமைப்பு – சிங்கள பௌத்த மதபீடங்கள் – சிங்கள அதிகார வர்க்கம் அனைத்தும் இணைந்ததே சிங்கள ஆளும் வர்க்கமாகும். தற்போது இது தெட்டத் தெளிவாகியிருக்கின்றது. ஏனெனில், இலங்கைத் தீவில் ஏற்பட்ட வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியானது, சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும், அதன் மூலம் இலங்கைத் தீவு முன்னோக்கி பயணிக்குமென்னும் நம்பிக்கை நம்மவர்கள் மத்தியில் கூட துளிர்விட்டது. ஆனால் அனைத்தும் தற்போது கானல் நீராகியிருக்கின்றது.
இந்த இடத்திலிருந்தே நமக்கான அரசியல் பொறிமுறை தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டும். ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு, 14 வருடங்களுக்கு பின்னர் கூட, நமக்கானதொரு பொறிமுறை தொடர்பில் நாம் சிந்திக்க முற்படுகின்றோம் என்றால், அது நமது பலவீனத்திற்கான சான்றாகும். ஏனெனில் ஒரு ஓடுக்குமுறைக்கு உள்ளாகியிருக்கும் சமூகத்திற்கான அரசியல் பண்பானது, நம்மிடம் மிகவும் பலவீனமாகவே இருக்கின்றது. நமக்குள் தொடர்ந்தும், ஒற்றுமையை தேடுபவர்களாகவே, நாம் இருக்கின்றோம். இப்போம் ஜக்கியமாக செயற்பட வேண்டுமென்னும் குரல்களை அவ்வப்போது நமக்குள் காண முடிகின்றது. சிங்கள-பெருந்தேசியவாதத்தின் ஒடுக்குமுறையை, முக்கால் நூற்றாண்டுகாலமாக, எதிர்கொண்டுவரும் ஒரு மக்கள் கூட்டத்திற்கான நம்பிக்கையே, நாம் ஒரணியாக இருப்பதுதான். அது ஒன்றே நமது பலமாகும். ஆனால் நாமோ – நமக்குள் கட்சிகளாக, அமைப்புக்களாக, நபர்களாக பிரிந்து கிடக்கின்றோம். இப்போது மதரீதியாகவும் நமக்குள் நாமே பிளவடைந்து செல்கின்றோம்.
நமக்கான அரசியல் நகர்வுகளில், நாம் பல உபாயங்களை கைக்கொள்ளலாம். அதில் தவறில்லை. ஆனால் அந்த உபாயங்கள், நாம் ஒரு மக்கள் கூட்டம் என்பதை சிதைத்தழிப்பதாக இருக்கக் கூடாது. ஏனெனில் சிங்கள-பெருந்தேசியவாதமானது, தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிட்ட போது, சாதி, மதம்,வர்க்கம், பிரதேசம் என்னுமடிப்படையில் ஒடு;க்குமுறையை பிரயோகிக்கவில்லை. தமிழர் என்னும் அடையாளத்தின் மீதே கைவைத்தது. அந்த அடிப்படையிலெயே இப்போதும் அதன் ஆக்கிரமிப்பை அரங்கேற்றிவருகின்றது.
எந்த அடையாளத்தின் மீது ஒடுக்குமுறை பிரயோகிக்கப்படுகின்றதோ, அந்த அடையாளமே நமது ஒரேயொரு பலமாகும். தமிழர் தேசத்தின் அரசியல் கட்சிகளும், புத்திஜீவிகளும், சிவில் சமூக அமைப்புக்களும் இதனை உணர்ந்தவர்களாக, தங்களின் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். இது தாயகத்திற்கும் புலம்பெயர் சமூகத்திற்குமானது. புலம்பெயர் சமூகத்தை பொறுத்தவரையில் நாம் நமக்குள் பிளவடைவதற்கும், நமக்குள் முரண்படுவதற்கும் எந்தவொரு அவசியமுமில்லை. தாயக மக்கள் செயற்படுவதற்கு பல தடைகளுண்டு. சிங்கள மேலாதிக்க வல்லூறுகளை சமாளித்துக் கொண்டுதான், அவர்கள் செயலாற்ற வேண்டியிருக்கின்றது. ஆனால் நாமோ, மேற்குலக தாராளவாத ஜனநாயக சூழலுக்குள் வாழ்கின்றோம். சுதந்திரக் காற்றை சுவாசிக்கின்றோம். எனவே புலம்பெயர் உறவுகளே! தாயக மக்களை பாதுகாக்கும் வரலாற்று பணியை நாம் சுமந்து நிற்கின்றோம் என்பதை, இந்த நாளில் மனிதிலிருத்துவோம்.
தாயக, புலம்பெயர் உறவுகளே – பிராந்திய, உலக அதிகார சக்திகளின் நகர்வுகளை துல்லியமாக கணித்து, சூழ்நிலை கருதியும் – அதே வேளை, நமது இறுதி இலக்கை மறந்துவிடாமலும் செயலாற்ற வேண்டுமாயின், நாம் ஒன்றாதல் வேண்டும். நாம் நமக்குள் பிளவடைந்தால், நம்மால் ஒரு போதுமே, நமக்கான அரசியல் பொறிமுறையொன்றை உருவாக்க முடியாது. உலக அரசியல் சாதா மாறிக் கொண்டிருக்கின்றது. அந்த மாற்றங்கள் நமது அசியலில் எதிர்பாராத தாக்கங்களையும் ஏற்படுத்தலாம். ஆனால் நாம் ஒன்றாக இருந்தால், எவ்வாறான சவால்களையும் சமாளிப்பதற்கான உத்வேகத்தை நம்மால் அடைய முடியும். உலகில் மீண்டெழுந்த அனைத்து மக்கள் கூட்டங்களும், சூழ்நிலைகளையும், வாய்ப்புக்களையும் சரியாக பயன்படுத்திக் கொண்டதானாலேயே, வெற்றிபெற்றன.
உறவுகளே, நமது தேசத்திற்காக ஆகுதியானவர்களை மனதில் நிறுத்தும் இந்த நாளில் – நமக்குள், நாமே ஏற்படுத்திக்கொண்ட, பிளவுகளை கழையும் சிந்தனைகளுக்கு, உரமூட்டுவதற்காக உறுதிபூணுவோம். நமது உறுதிக்கு சிரம் தாழ்த்தி, நம் தேசப் பணியை முன்னெடுப்போம். ஆகுதியானவர்களை அஞ்சலித்தல் என்பது வெறும் வார்த்தையல்ல. அது மகத்தான செயலுக்கான உரமாகும்.
நமது அடுத்த சந்ததியினருக்கு இன்னுமொரு முள்ளிவாய்க்கால் அவலம் நடக்க விடமாட்டோம் என்ற திடசங்கற்பத்துடன் முள்ளிவாய்க்கால் அவலத்தை நினைவு கொள்வோம். மக்களும் தேசங்களும் மகிழ்வின்போது ஒன்றிணையும் கணங்களைவிட, மனத் துயரின்போது ஒன்றிணையும் கணங்களே மிகவும் கனதியானவை, வலிமையானவை. வரலாற்றுக் கூட்டுநினைவாக, மகிழ்வின் கணங்கள் இருப்பதனைவிட, துயரின் கணங்களே மிகவும் அவலமானவை, ஆழமானவை. எனவே முள்ளிவாய்க்கால் இனவழிப்பில் தம்முயிர் ஈந்தவர்களின் நினைவுடன், தமிழீழ தேசத்தின் விடுதலைக்காகத் தொடர்ந்து ஓயாது உழைப்போம் என உறுதி எடுத்துக் கொள்வோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
நிமால் விநாயகமூர்த்தி
நாடு கடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர்.
மே 18, 2023.