நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர், இருவரும் புறப்பட்ட போது, புகைப்பட கலைஞர்கள் காரில் பின் தொடர்ந்தனர். அவர்களை படம் எடுப்பதற்காக ஆபத்தான முறையில் அதிவேகத்தில் துரத்தியதாக, ஹாரியின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
6 கார்களில் தொடர்ந்து 2 மணி நேரம் ஆபத்தான வகையில் பின் தொடர்ந்ததாகவும், அப்போது மற்ற கார்கள், சாலை தடுப்புகள், காவலர்கள் மற்றும் பாதசாரிகள் மீது மோதிய சம்பவங்களும் அரங்கேறியதாகவும் குறிப்பிட்டுள்ளார். நல்வாய்ப்பாக ஹாரி – மேகன் தம்பதி இதில் காயமின்றி தப்பினர்.
ஹாரியின் தாயாரான இளவரசி டயானாவை, பிரான்ஸின் பாரிஸ் நகரில் இதே போன்று புகைப்பட கலைஞர்கள் துரத்திச் சென்ற போது ஏற்பட்ட கார் விபத்தில் அவர் உயிரிழந்தார். அந்த சம்பவத்தை தற்போதைய துரத்தல் நிகழ்வுடன் ஒப்பிடுவதால் பேசு பொருளாகியுள்ளது.
இது தொடர்பாக விளக்கமளித்துள்ள நியூயார்க் மேயர் எரிக் ஆடம்ஸ், மக்கள் நெருக்கம் அதிமுள்ள நகரில் இது போன்ற நிகழ்வை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், இது பொறுப்பற்ற செயல் எனவும் விமர்சித்துள்ளார்.