இன்றைய வேலைவாய்ப்பு களத்தில் மோசமான பணிச் சூழல் அதிகம் நிறைந்துள்ளது. பணியாளர்களுக்கான புதிய வாய்ப்புகளோ, வளர்ச்சியோ பல இடங்களில் இருப்பதில்லை. இந்த யதார்த்தத்தை புதிதாக வேலை தேடுபவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
ஆனால் இதை சமாளிக்க புதிய வழியை கண்டுபிடித்துள்ளார் சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர். தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு தன் பெற்றோருக்கு முழு நேர மகளாக மாறியிருக்கிறார் நியானன் என்ற பெண். இதன் மூலம் சமூக ஊடகத்தில் ஒரு அர்த்தமுள்ள உரையாடலுக்கு காரணமாக இருந்துள்ளார். நியானனின் நிதித் தேவையை அவரது பெற்றோர்களே பார்த்துக் கொள்கிறார்கள். முழு நேரமும் தங்களை கவனித்து கொள்வதற்காக தங்கள் மகளுக்கு மாதம் தோறும் 47,000 ரூபாய் சம்பளமாக வழங்குகிறார்கள்.
கடந்த 15 வருடங்களாக செய்தி நிறுவனமொன்றில் பணியாற்றி வந்தார் நியானன். இவரது அணுபவத்தைக் கருத்தில் கொண்டு, 2022ம் ஆண்டு நியானனுக்கு வேறொரு பணி ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்தப் பணி அதிக மன அழுத்தத்தை அவருக்கு தந்ததோடு எப்போதும் அலுவலகத்தில் இருக்க வேண்டிய சூழலை உருவாக்கியது.
“உன் வேலையை விட்டுவிட்டு எங்களோடு வந்துவிடு. உனக்கு நாங்கள் சம்பளம் தருகிறோம்” என அவரிடம் பெற்றோர் கூறியுள்ளனர். இவரின் பெற்றோருக்கு பென்சன் பணமாக 100,000 யுவான் வருகிறது. அதிலிருந்து 4000 யுவானை, தங்களை கவனித்துக் கொள்ள தங்கள் மகளுக்கு சம்பளமாக கொடுக்கிறார்கள். இதன் காரணமாகவே தன்னுடையை வேலையை ராஜினாமா செய்துவிட்டு, உடனடியாக “முழு நேர மகள்” வேலையை ஏற்றுக்கொண்டார்.
“இந்த வேலையை அன்போடு செய்கிறேன். தினமும் ஒரே போன்ற வேலையை செய்யாமல் வேறு வேறு வேலையை செய்வதால் எனக்கும் சந்தோஷமாகவே இருக்கிறது” எனக் கூறுகிறார் நியானன். ஒவ்வொரு நாள் காலையிலும் தனது பெற்றோர்களோடு சேர்ந்து நடனம் ஆடுகிறார். இதற்காக ஒரு மணி நேரத்தை ஒதுக்கியுள்ளார். அதன்பிறகு மளிகைப் பொருட்களை வாங்க கடைத்தெருவிற்கு தனது பெற்றோரை அழைத்துச் செல்கிறார். மாலை வேளையில் தனது தந்தையோடு சேர்ந்து இரவு நேர உணவை சமைக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் மின்சாரம் தொடர்பான அனைத்து வேலைகளையும் அவரே பார்த்துக் கொள்கிறார். வாகனம் ஓட்டுகிறார். மாதம்தோறும் குடும்பத்தோடு சுற்றுலா செல்கிறார்.
பெற்றோரின் அருகிலேயே இருப்பது சிகிச்சை அளிப்பது போல் இதமாக உள்ளது. “இன்னும் அதிகமாக பணம் சம்பாதித்து விடமாட்டோமா என்ற ஆசையே நம் மன அழுத்தத்திற்கு மூலக்காரணம்” என்கிறார் நியானன்.
“இதை விட நல்ல வேலை கிடைத்தால், நீ தாராளமாகச் செல்லலாம். உனக்கு வேறு வேலை பார்க்க விருப்பம் இல்லையென்றால், வீட்டிலேயே இருந்து எங்களைக் கவனித்துக்கொள்” என தங்கள் மகளுக்கு உத்தரவாதம் கொடுத்துள்ளனர்.
போட்டி நிறைந்த வேலைவாய்ப்பு சந்தை மற்றும் சோர்வடையச் செய்யும் பணி நேரங்கள் காரணமாக ஏதாவது ஒரு மாற்றம் கிடைக்காதா என நினைத்துக் கொண்டிருந்த சீன இளைஞர்களிடம் “முழு நேர மகள்” என்ற கருத்து பிரபலமடையத் தொடங்கியுள்ளது. பணத்தேவைக்காக பெற்றோர்களை சார்ந்திருப்பதும் அவர்களை கவனித்துக் கொள்ள நேரம் ஒதுக்குவதையுமே “முழு நேர மகள்” என்ற பதம் குறிக்கிறது.
இத்தகைய மாற்று வாழ்க்கை முறை நமக்கொரு சுயாட்சியையும் வழக்கமான வேலை கட்டுப்பாடுகளிலிருந்து விடுதலையையும் கொடுக்கிறது. இன்றைய நவீன யுகத்திலும் பெற்றோர்களை சார்ந்தே பிள்ளைகள் இருப்பதை இது மேலும் நிலைநிறுத்துகிறது என சில விமர்சகர்கள் கூறுகிறார்கள். ஆனால் இதன் ஆதரவாளர்களோ இத்தகைய வழக்கத்திற்கு மாறான ஏற்பாடுகளை நாம் மனமுவந்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார்கள். இன்றையை நவீனகால சமூகத்தில் வேலைவாய்ப்புகளும் குடும்ப அமைப்புகளும் மாற்றம் அடைந்து வருவதையே இந்த “முழு நேர மகள்” நமக்கு உணர்த்துவதாக சிலர் குறிப்பிட்டுள்ளனர்