சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்பது பலபேரினில் கனவாக உள்ளது. எப்படியாவது கஷ்டப்பட்டு ஒரு கார் வாங்கிவிட்டால், அதனை பராமரிப்பதற்கு என்று தனியாக செலவு செய்யவேண்டி இருக்கிறது. இந்த நிலையில், இங்கிலாந்தில் வாழும் இந்திய வம்சாவழி சீக்கியர் ஒருவர் கார் வாங்கி குவிப்பதையே லட்சியமாக கொண்டு வாழ்ந்து வருகிறார். அதுவும் சாதாரண கார்கள் இல்லை. ரோல்ஸ் ராய்ஸ், லாம்போர்கினி, புகாட்டி இப்படி உலகிலேயே மிகவும் காஸ்ட்லியான கார்களை வாங்கி குவித்து வருகிறார்.
அவரது கராஜை பார்த்தால் ஏதோ கார் ஷோரூம் போல காட்சியளிக்கிறதாம். லண்டனில் வசிக்கும் ரியுபென் சிங் என்ற தொழிலதிபர் தான் அவர். வழக்கமாக நாம் அணியும் உடையின் வண்ணத்திற்கு ஏற்றார் போல் ஷூ அணிவோம். பேக் பயன்படுத்துவோம். மொபைல் கவர் மாற்றுபவர்களும் இருக்கிறார்கள். கொஞ்சம் காஸ்ட்லியாக சிலர் பைக்குகள் கூட சில கலர்களில் வைத்திருப்பார்கள்.
ரியுபென் சிங் அணியும் டர்பன் என்னும் தலைப்பாகையின் வண்ணங்களுக்கு மேட்சிங்காக கார்கள், அதுவும் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் வைத்திருக்கிறார். ரியுபென்னிடம் 15 வண்ணங்களில் தலைப்பாகைகள் இருக்கின்றன. அந்த பதினைந்து வண்ண தலைப்பாகைகளின் வண்ணங்களுக்கு மேட்சாக 15 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் வைத்திருக்கிறார் நம்ம சர்தார்ஜி. இவர் கடந்த தீபாவளிக்கு தனக்கு தானே பதினைந்து ரோல்ஸ் ராய்ஸ் கார்களை பரிசிளித்துக் கொண்டாராம்.
பதினைந்து ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் மட்டுமல்ல. இவரிடம் 3.2 கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போர்கினி ஹூராகன், கிட்டத்தட்ட 13 கோடி ரூபாய் மதிப்புள்ள உலகின் மிக மிக அரிதான காரான புகாட்டி என பல கார்கள் உள்ளன. இது மட்டுமல்ல ரியுபென் சிங்கிடம் ஃபெராரி F12 பொர்லினெட்டா, போர்ஸ்ச் 918 ஸ்பைடர், பகானி ஹயுரா, என உலகின் அத்தனை காஸ்ட்லி கார்களும் இருக்கின்றன.
1970களில் இவருடைய குடும்பம் இந்தியாவில் இருந்து இங்கிலாந்திற்கு குடி பெயர்ந்தது. இப்போது ரியுபென் சிங் இங்கிலாந்தில் பங்கு வர்த்தக தொழில் செய்து வருகிறார். அதோடு கஸ்டமர் சர்வீஸ் அவுட் சோர்சிங் நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இவரை பிரிட்டிஸ் பில்கேட்ஸ் என்றே அழைக்கிறார்கள். இவர் டர்பான் நிறத்திற்கு மேட்சிங்காக தன்னிடம் இருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கார்களோடு நிற்கும் புகைப்படம் அண்மையில் இணையத்தில் வெளியானது. இதையடுத்து உலக பிரபலமாகிவிட்டார் ரியுபென் சிங்.