ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கிய பின்னர், அடுத்தடுத்த அதிரடியான பல முடிவுகளை எடுத்து வருகிறார். ட்விட்டரில் அங்கீகார குறியீடு பெறுவதற்கு மாதச் சந்தா நடைமுறையை அறிமுகப்படுத்திய எலான் மஸ்க், பின்னர், 10 லட்சம் பேருக்கு மேல் பின் தொடரும் கணக்குகளுக்கு மட்டும் கட்டணம் கிடையாது என கூறினார்.
இந்நிலையில், அங்கீகாரத்திற்காக மாத கட்டணம் செலுத்தும் பயனாளர்கள் வருமானம் பெறும் வகையில் புதிய திட்டத்தை எலான் மஸ்க் அறிவித்துள்ளார். அதன்படி, அங்கீகாரம் பெற்ற பயனாளர்களின் ட்வீட்களுக்கு, பதில்கள் வரும் இடத்தில் விளம்பரங்களும் இடம்பெறும் என குறிப்பிட்டுள்ளார்.இந்த விளம்பரத்தின் மூலம் ட்விட்டருக்கு கிடைக்கும் வருவாயில் குறிப்பிட்ட தொகை, பயனாளர்களுக்கு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதற்காக முதல்கட்டமாக 41 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. ட்விட்டரின் தலைமைச் செயல் அதிகாரியாக லிண்டா பதவியேற்ற பின்னர், சந்தாதாரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், விளம்பரம் மூலம் வருவாயை பெருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.