உலக நாடுகளுக்கிடையேயான ஏற்றுமதி-, இறக்குமதி அனைத்திற்கும் அமெரிக்க டாலர் பயன்பாட்டை குறைத்து அமெரிக்காவை சார்ந்திருக்கும் நிலையை மாற்ற அண்மைக்காலமாக சில முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியாவும் பங்கேற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உட்பட சில இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள், ரஷியாவிலிருந்து எண்ணெய் இறக்குமதிக்கு யுவான் எனப்படும் சீன நாணயத்தில் பணம் செலுத்தத் தொடங்கியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பினால் விதிக்கப்பட்ட சர்வதேச தடைகளின் ஒரு பகுதியாக டாலர்கள் மற்றும் யூரோக்களில் பரிமாற்றங்கள் கையாளப்படுவதற்கு அனுமதிக்கப்படாததால், இதற்கு மாற்றாக யுவான் பயன்பாடு தொடங்கியுள்ளது.
இந்தியாவின் 3 தனியார் சுத்திகரிப்பு நிறுவனங்களில் குறைந்தது 2 நிறுவனங்கள், ரஷிய இறக்குமதிகளுக்கு யுவானில் பணம் செலுத்துகின்றன என செய்திகள் தெரிவிக்கின்றன. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகியவை தங்களின் நாணய விருப்பங்களை விரிவுபடுத்தும் முயற்சியில் ரஷியாவின் கச்சா எண்ணெயை யுவானில் செலுத்த பரிசீலித்து வருகின்றன. ஜூன் மாதம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஐசிஐசிஐ வங்கி மூலமாக ரஷியாவின் ரோஸ்நெப்ட் எண்ணெய் நிறுவனத்திலிருந்து பெறப்படும் எண்ணெய்க்கான தொகையை யுவானில் செலுத்தியது. அப்போதிலிருந்து, சரக்குகளுக்கு பணம் செலுத்த அதே முறையை பயன்படுத்தியது.
இந்தியன் ஆயில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், ரஷிய ஆதரவு பெற்ற நயாரா எனர்ஜி, ஹெச்பிசிஎல் மிட்டல் எனர்ஜி லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இந்த விஷயத்தில் தாம் எடுத்திருக்கும் முடிவுகள் குறித்து மவுனமாக காத்துள்ளன.
எண்ணெய் இறக்குமதி மட்டுமல்லாது, இதே போல இந்தியாவின் மிகப்பெரிய சிமென்ட் உற்பத்தியாளரான அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம், அதன் நிலக்கரி இறக்குமதிக்கும் ஜூன் 2022-ல், யுவானில் பணம் செலுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.