ஐக்கிய இராச்சியத்தில் பரத கலாலயம் நாட்டியப் பள்ளியினரால் 08/07/23 அன்று மாலை Ruislip வின்ஸ்டன் சேர்ச்சில் மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட நாட்டிய மற்றும் இசை நிகழ்ச்சி பற்றிய குறிப்பொன்றை வரைவது இக்காலத்தின் தேவை என்றால் அது மிகையாகாது.
இந் நாட்டியப் பள்ளி பரத கலா வித்தகர் திருமதி விஜயகுமாரி ஐங்கரன் அவர்களால் கிட்டத்தட்ட முப்பதாண்டுகளாக புலம்பெயர் மண்ணில் நடாத்தப்பட்டு வருகின்றது. அதேபோல் இசை நிகழ்ச்சிகளால் இவ் விழாவுக்கு ஆதரவும் ஊக்கமும் தந்த ஆசிரியை சுகிர்தகலா கடாட்சம் அவர்களும் புலம் பெயர் தேசத்தில் ஈழ மண்ணின் கலை, கலாச்சார விழுமியங்களை இளைய தலைமுறை பற்றிப் பிடிக்க அருந் தொண்டாற்றி வருபவர்.
இந்நிகழ்ச்சியில் இளம் நடனக் கலைஞர்களிலிருந்து நடனம் கற்று பட்டம் பெற்றுப் பிரகாசிக்கும் நர்த்தகிகள் வரை கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
குழந்தைகள் முதல் வேலை பார்க்கும் இளம் பெண்கள் வரை திறம்படச் சபையோர் வியக்கும்படி விறு விறுப்பாக ஆடி நடன விருந்தளித்தார்கள்.அனைத்து மாணவிகளினதும் அரைமண்டி அங்க அசைவு முகபாவம் அழுத்தம் எவற்றிலும் எந்தவித குறையும் இல்லாதவாறு ஆசிரியை பயிற்சியளித்திருந்தார். மாணவிகளும் நடனத்துடன் ஒன்றி லயித்து ஆடினார்கள் ஆடலுக்கான பாடல் தெரிவு ஆடைத் தெரிவு மிகவும் அருமை என்று சொன்னால் அது மிகையாகாது.
நடன அமைப்பும் நட்டுவாங்கமும் ஆசிரியையின் ஆளுமையை வெளிப்படுத்தியது.முழு நிகழ்ச்சிக்கும் முத்தாய்ப்பு வைத்தால்போல் மயில்நீல வர்ண உடையில் மயில் நடனம் அமைந்திருந்தது. அரங்கேற்றம் செய்த சிரேஷ்ட மாணவிகள் வேலைப் பளுவுடனும் அதிக அக்கறை செலுத்தி அம்மயில நடனம் ஆடியிருநதார்கள். மயிலைப் போன்றே ஒயிலும் கழுத்தசைவுகளும் சபையோரைக் கவர்ந்திருக்க வேண்டும் பலத்த கரகோஷம் மூலம் புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.
இசை நிகழ்ச்சிகளும் சிறுமியரின் விநாயக வணக்கத்தில் ஆரம்பித்து தாய் மண்ணின் அழகு பாடி இசை மாருதமாக வியாபித்து அரங்கு நிறைந்திருந்த சபையோர்களை ஆகர்சித்து மகிழ்வித்தது.
நாட்டிய மற்றும் இசையாசிரியர்களின் மாணவர்களின் பெற்றோர் தங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி ஒத்துழைத்ததோடன்றி சிற்றுண்டிகள் மற்றும் குடிபானங்களை வழங்கியதோடன்றி தாங்களே உபசரிப்பிலும் தங்கள் உழைப்பை வழங்கினர்.
இத்தகைய கூட்டு நடவடிக்கையின் விளைவாக £ 800 ratnam foundation இயக்குநர் கலாநிதி நித்தியானந்தன் அவர்களிடம் கையளி்க்கப்பட்டது.