வி.தேவராஜ்
மூத்த ஊடகவியலாளர்
- பந்து இந்தியா பக்கம்.
- நான் ராஜபக்ஷ அல்ல ரணில் விக்ரமசிங்க
- வடக்குக் கிழக்கு இணைப்பு இல்லை.
தமிழ் நாட்டில் பெரும்பாலான மக்கள் காமராஜர் போன்ற தலைவர்களைத் தேடுகின்றனர்.இது பற்றி வட்சப்பில் பதிவிட்டிருந்த நண்பர் ஒருவர் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். ‘ காமராஜர் போல தலைவர்களைத் தேடுகின்றோமே தவிற .. அந்தக் கால வாக்காளர் போல் நாம் நேர்மையாக இல்லையே என்பதை உணர மறுக்கின்றோம்‘ எனக் குறிப்பிட்டுள்ளார்.தமிழகத்தின் ஒட்டு மொத்த அரசியல்வாதிகளை மட்டுமன்றி தமிழக வாக்காளர்களும் நேர்மை இன்றி இருப்பதினாலேயே தமிழகம் சீரழிந்து போய்க் கிடக்கின்றது என்பதை அனைத்து தரப்பினருக்கும் உறைக்கும் வகையில் இந்தப் பதிவு அமைந்துள்ளது.
காமராஜர் போன்ற தலைவர்களைத் தேடும் தமிழகம் போன்றே இலங்கையிலும் இன்று மக்கள் தலைவர்களைத் தேடிக் கொண்டிருக்கின்றனர்.
- லீ குவான் யூ போன்ற ஒரு தலைவரை தேடும் தென்னிலங்கை
சுதந்திர இலங்கையின் 75 வருட கால வரலாற்றில் தென்னிலங்கை மக்கள் முதன் முறையாக தமக்கான நாட்டுக்கான ஒரு தலைவரைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். இலங்கையில் மாற்றத்தை நோக்கி அரகலயாக்களின் பின்னால் அணிதிரண்ட தென்னிலங்கை மக்கள் இலங்கையில் ‘சிஸ்டம் சேன்ஜ்‘ மாத்திரமல்ல அதனைக் கொண்டு நடத்தக் கூடிய தலைவரையும் தேடினர்.அவ்வேளையில் இலங்கைக்கு இன்று தேவை ஒரு லி குவான் யு என உதயனில் கட்டுரை வரைந்திருந்தேன். இன்று பெரும்பாலான தென்னிலங்கை மக்கள் தமக்கு லீ குவான் யூபோன்ற தலைவர் தேவை என எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
லீ குவான் யூ போன்ற ஒரு தலைவரையே ஜனாதிபதித் தேர்தலில் முன் நிறுத்தியுள்ளதாக தென்னிலங்கையில் பெரிதளவில் பேசப்பட்டது. அந்த லீ குவான் யூ வேறு யாருமல்ல கோதாபய ராஜபக்சதான். அவ்வேளையில் இன்றைய வெளி நாட்டு அமைச்சர் அலி சப்ரி அவர்கள் பேசும் போது
‘ தனி நபர்களால் நாடுகளின் தலைவிதியே மாற்றி அமைக்கப்பட்டது. அவ்வகையில் லி குவான் யு வால் சிங்கப்பூர் சிருஸ்டிக்கப்பட்டது.. மகாதீர் முகமட்டால் மலேசியா சிருஸ்டிக்கப்பட்டது..அது போல் இலங்கை கோதாபய ராஜபக்சவால் மாற்றத்திற்குள்ளாகும். இலங்கையின் அடுத்த லீ குவான் யூ கோதாபய ராஜபக்ச என்று குறிப்பிட்டார். தென்னிலங்கை மக்களும் பல்வேறு எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் 69 இலட்சம் வாக்குகளால் கோதாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக்கினர். மக்களின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போகவே 75 வருடகால சுதந்திர இலங்கையில் மக்கள் எழச்சியால் தூக்கி வீசப்பட்ட ஜனாதிபதியாக கோதாபய ராஜபக்ச வரலாற்றில் பதிவானார்.
ஆரகலய மக்கள் எழுச்சியுடன் இலங்கையில் புதிய யுகம் மலரும் என எதிர்பார்த்த தென்னிலங்கை மக்களுக்கு கிடைத்ததோ பெருத்த ஏமாற்றமே. ‘புதிய போத்தலில் பழைய கள்‘ பாணியாகக் கூட அமையாது ‘பழைய போத்தலில் பழைய கள்‘ சிஸ்டமே‘ தென்னிலங்கை மக்களுக்கு மீண்டும் கிடைத்துள்ளது. ஆனால் தென்னிலங்கை மக்கள் தமக்காக லீ குவான் யூ வைத் தேடும் தாகத்தை ‘பழைய கள்‘ அரசியலால் தடுத்துவிட முடியவில்லை.
- தமிழ் மக்கள் தமக்கான தலைவரைத் தேடுகின்றனர்.
தமிழக மக்கள் போன்று தென்னிலங்கை மக்கள் மாத்திரமல்ல இலங்கையில் தமிழ் மக்களும் தலைவர்களைத் தேடிக் கொண்டிருக்கின்றனர்.
நவக் கிரகங்களாக நிற்கும் தமிழ்த் தலைமைகளிடையே கடந்த 14 வருடங்களாக தமிழ் மக்களும் தலைவர்களைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். நேர்மை இன்றி இருக்கும் தமிழ்த் தலைமைகளின் பின்னால் தமிழ் மக்களும் பிரிந்து நின்று தலைவர்களைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பெரும்பாலான தமிழ் மக்களின் மனங்களில் ‘தலைவர்‘ போன்று இன்னொரு ‘தலைவர்‘ வரமாட்டாரா என்ற ஏக்கமே குடி கொண்டுள்ளது.
தென்னிலங்கை அரசியல் தலைமைகளின் தமிழர் விரோதப் போக்கு இலங்கை அரசின் இயந்திரக் கட்டமைப்பின் இனவாத செயற்பாடுகள் பேரினவாதத்தின் கடும் போக்கு என தென்னிலங்கையின் அணைத்து கட்டமைப்புக்களும் தமிழ் மக்கள் மீது பிரகடனப்படுத்தியுள்ள போர் என்பன தமிழ் மக்களின் சிந்தனைகளில் பழைய பிம்பங்கள் மீண்டும் உருவேறத் தொடங்குகின்றன. இதற்கான முழுப் பொறுப்பையும் தென்னிலங்கை சக்திகளும் தற்போதைய தமிழ் தலைமைகளுமே ஏற்க வேண்டும்.
2009 இல் கிளிநொச்சி படைகள் வசம் வந்த போதே தமிழ் மக்களுக்கென விசேட பிரச்சனைகள் எதுவும் இல்லை என சிங்கள புத்திஜீவிகளில் மற்றும் சிங்கள ஊடகவியலாளர்களில் பெரும் பகுதியினரும் பேசத் தொடங்கிவிட்டனர்.
13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த இந்தியாவிடம் கோரிக்கை முன்வைப்பதற்கென யாழில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது உரையாற்றிய சுரேஸ் பிரெமச்சந்திரன் பேசுகையில் போர் முடிவடைந்ததை அடுத்து சம்பந்தன் ஐயாவும் தானும் சந்திரிகா அம்மையாரைச் சந்தித்து ‘தற்போது போர் முடிவடைந்துவிட்டது. தமிழர் விவகாரத்துக்கு தீர்வு காணுவது தொடர்பாக பேச்சு வார்த்தைகளை ஆரம்பித்தால் என்ன‘ என்று வினவியுள்ளனர்.அதற்கு சந்திரிகா அம்மையார் ‘போர்தான் முடிவடைந்து விட்டதே. இனி என்ன பேசுவதற்கு உள்ளது‘ என்று பதில் அளித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் பலமாக இருந்தவரை பேச்சு வார்த்தைக்கு இறங்கி வந்த தென்னிலங்கை அரசியல் சக்திகள் போர் முற்றுப் பெற்றவுடன் பேச்சு வார்த்தையும் இல்லை தமிழருக்கென பிரச்சனையும் இல்லை என்ற நிலைப்பாட்டை எடுக்கத் தொடங்கின. இந்தத் தலைமைகள்தான் தமிழர் விவகாரத்தக்குத் தீர்வு காண்பர் என்று தமிழ்த் தலைமைகளில் வெளிப்படையாக இணக்க அரசியல் நடத்துபவர்களும் மறைமுகமாக இணக்க அரசியல் நடத்துபவர்களும் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டிக் கொண்டிருக்கின்றனர்.
- தென்னிலங்கை தலைமைகளின் இராஜதந்திரம்.
தென்னிலங்கைத் தலைமைகளைப் பொறுத்து ஐ.நா. மனித உரிமை பேரவை கூட்டத் தொடர் நடைபெறும் போதும் அல்லது இந்தியாவுக்கான உத்தியோகப் பயணத்தின் போதும் தமிழ்த் தலைமைகளை அழைத்துப் பேசுவதும் பயணம் முடிந்த பின் தமிழர் விவகாரத்தை கிடப்பில் போடுவதும் வழமையான இராஜதந்திர காய் நகர்த்தலாகும்.
அந்தவகையில் மகிந்த ராஜபக்சவின் நாடாளுமன்றக் குழுவினால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டபின் ரணில் விக்ரமசிங்க இந்தியப் பயணத்துக்கான வெள்ளோட்டமாக தமிழர் விவகாரத்துக்கான தீர்வு குறித்துப் பேசத் தொடங்கினார். 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.பிறகு இந்த விவகாரத்தைக் கிடப்பில் போட்டுவிட்டார்.
- இந்தியாவிடம் சரணடைந்த தமிழ்க் கட்சிகள்
தற்போது இந்தியப் பயணத்தக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்க் கட்சிகள் தனித்தும் கூட்டாகவும் இந்தியப் பிரதமருக்க 13ஐ முழுமையாக அமல்படுத்துவது தொடர்பாக கடிதம் அனுப்பியுள்ளன. கஜேந்திர குமார் பொன்னம்பலம் அணி 13 தொடர்பாக 30க்கும் மேற்பட்ட நீதிமன்றத் தீர்ப்புக்களைச் சுட்டிக்காட்டியும் சமஷ;டி முறையிலான அதிகாரப் பரவலாக்கல் குறித்த வலியுறுத்தலுடன் இந்தியப் பிரதமருக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.மொத்தத்தில் தமிழ்க் கட்சிகள் அனைத்தும் தமிழர் விவகாரத்துக்கான தீர்வு குறித்து இந்தியாவிடம் சரணடைந்துள்ளன.
இதனை தமிழ்க் கட்சிகள் என்றோ செய்திருக்க வேண்டும். 2009 ஆம் ஆண்டு போர் மௌனிக்கப்பட்ட பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான சம்பந்தன் ஐயா இந்த நகர்வை மேற் கொண்டிருக்க வேண்டும்.மக்கள் ஆதரவும் இருந்தது. அதேவேளையில் நாடாளுமன்ற ஆசனங்களும் இருந்தன.
- தமிழர் ஒற்றுமை எங்கோ நிற்கிறது.
ஆனால் இன்று பலம் வாய்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இல்லை. தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர் மற்றும் அதன் நாடாளுமன்ற உறுப்பினர் என்றவகையில் தமிழ்க் கட்சிகளில் ஒன்றாக தமிழரசுக் கட்சியைச் சார்ந்தவராக சம்பந்தன் ஐயா களத்தில் நிற்கின்றார். எனவேதான் 13 வது திருத்தம் தவிற வேற விடயங்கள் கறித்து ரணில் விக்ரமசிங்க பேசியபோது சம்பந்தன் ஐயா அவர்கள் எங்களை தொடர்ந்தம் ஏமாற்றாதிர்கள் என்று கடும் கோபத்தடன் கூறியுள்ளார்.
அரச தரப்புடனான கடந்த காலப் பேச்சு வார்த்தைகளின் போது சம்பந்தன் ஐயா கத்திப் பேசினார் மேசையில் கோபமாக அறைந்தார் என நடைபெற்ற சம்பவங்களின் போது அமைதியாக இருந்த தென்னிலங்கை தலைமைகள் போல் அல்லாது அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ‘பேச விரும்பினால் பேசுங்கள். இல்லையேல் நீங்கள் எழந்து செல்லுங்கள்‘ என்று பதில் அளித்தள்ளார். இது தமிழரசுக் கட்சி தமிழ் மக்களுக்கத் தேடிக் கொடுத்த வெகுமதி.
அதேவேளையில் 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த ஜனாதிபதிஇ நான் ரணில் ராஜபக்ஷ அல்ல ரணில் விக்கிரமசிங்க என்று கேலியாக பதில் அளித்தள்ளார்.
13 ஐ முழுமையாக அமல்படுத்துவது குறித்து பேச சென்ற தமிழ்க் கட்சிகளிடம்; வடக்குஇ கிழக்கு பிரச்சினைகளுக்கு உகந்த தீர்வைத் தீர்மானிக்குமாறு தமிழ்க் கட்சித் தலைவர்களிடம் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் வடக்குஇ கிழக்கு பிரதேசங்களில் உள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான விரிவான பிரேரணையை ஏற்கனவே முன்வைத்துள்ளதாகவும்இ அதனை முன்னெடுப்பதா இல்லையா என்பது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமே இருப்பதாகவும் வலியுறுத்தினார்.
- மாகாண சபைகளின் செயல்பாடுகள், தேசிய ஒருமைப்பாடு
- மற்றும் நல்லிணக்க அலுவலகம்,உண்மையைக் கண்டறியும் பொறிமுறை.
- காணாமல் போனோர் அலுவலகம்
- வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி தொடர்பான பல்வேறு சட்டமூலங்கள் மற்றும் திட்டங்களை அவர் விளக்கினார்.
- மேலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நீர் வழங்கல், உட்கட்டமைப்பு அபிவிருத்தி.
- முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்கள் மற்றும் சுற்றுலாத் துறையை மையமாகக் கொண்ட திட்டங்கள் உட்பட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான அரசாங்கத்தின் அபிவிருத்தி முன்முயற்சிகளை ஜனாதிபதி எடுத்துரைத்தார்.
13ஐ நடைமுறைப்படுத்துவது பற்றி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பின்வருமாறு தமிழ்க் கட்சிகளுக்கு விளக்கியுள்ளார்.
- அனைத்துக் கட்சித் தலைவர்களும் விரிவான அதிகாரப் பகிர்வுக்கு இணங்கினால் மட்டுமே 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த முடியும்..
- வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் நலனுக்காக மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கையும் பாராளுமன்றத்தின் முழுமையான ஆதரவை விவாதம் மற்றும் கருத்தொற்றுமை மூலம் பெற வேண்டும் என்றும் ஜனாதிபதி தமிழ்க் கட்சிகளுடனான சந்திப்பின் போது வலியுறுத்தியுள்ளார்.
- பொலிஸ் அதிகாரங்களைத் தவிற பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அதிகாரங்களையும் வழங்குவது சாத்தியமாக இருந்த போதிலும் பொலிஸ் அதிகாரங்களை உள்ளடக்குவதற்குபாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சித் தலைவர்களின் இணக்கம் தேவைப்படும்.
- இவ்வாறான தீர்மானங்களுக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
- வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைப்பது குறித்து அரசாங்கம் விவாதிக்கவோ அல்லது அதற்குத் தயாராகவோ இல்லை என்று தெளிவுபடுத்தினார்.
- வடக்கு மற்றும் கிழக்கில் நீதி வழங்குவதில் வெளிநாட்டு நீதிபதிகளை ஈடுபடுத்த அரசாங்கம் தயக்கம் காட்டுவதாகவும்.ஆனால் தெற்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் நடைமுறையில் உள்ள முறைமைகளைப் பின்பற்றி வெளிநாட்டுகண்காணிப்பாளர்களிடமிருந்து அறிக்கைகளைப் பெறுவது குறித்து பரிசீலிப்பதாகவும் அவர் கூறினார்.
மொத்தத்தில் இந்திய பயணத்துக்கு முன் 13ஐ முழுமையாக அமல்படுத்துவதைத் தவிற வடக்குக் கிழக்குக்கான மக்கள் நலன் நோக்கிய அணைத்து அபிவிருத்திகள் குறித்த திட்டங்களை தமிழ்க் கட்சிகளின் முன் ஜனாதிபதி வைத்துள்ளார்.
அரசியலமைப்பில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேல் இடம்பெற்றுள்ள நிலையிலும் நடைமுறைக்கு வராத 13வது திருத்தச் சட்டத்தை இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டு 36 வருடங்களுக்குப் பிறகும் நடைமுறைப்படுத்துவதற்கு தென்னிலங்கைத் தலைவர்கள் பின்னடிக்கின்றனர் என்பதையே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இன்றைய நிலைப்பாடும் வெளிப்படுத்துகின்றது.
அரசியலமைப்பில் உள்ள 13வது திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கு இன்றைய நிலையிலும் நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்களினதும் இணக்கம் அவசியம் என்று கூறுவதும் நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு வேண்டும் எனக் கூறுவதெல்லாம் தமிழ் மக்கள் சிந்திய இரத்தமும் இழந்த உயிர்களும் தியாகங்களும் கிள்ளுக் கீரைக்குச் சமன் என்ற தென்னிலங்கையின் வெற்றி மமதையின் வெளிப்பாடாகவே உள்ளது.
மொத்தத்தில் 13ஐ முழுமையாக அமல்படுத்துவது கேள்விக்குறியே.
இப்பொழுது பந்து இந்தியா பக்கம் உள்ளது. ஏனெனில் தமிழர்களின் அரசியல் தலைவிதியை தீர்மானிக்கும் பொறுப்பை தமிழ்த் தலைமைகள் ஒன்றிணைந்து முதன் முறையாக இந்தியாவிடம் கையளித்தள்ளன.