பு.கஜித்தன்
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அதிக வரட்சி நிலவுகிறது. அந்தவகையில் யாழ்ப்பாணத்தில், புள்ளி விபரங்களின்படி சங்கானை பிரதேச செயலர் பிரிவிலேயே அதிக வரட்சி ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட வட்டுக்கோட்டை பகுதி மக்கள் கருத்து தெரிவிக்கையில்,
எமது பகுதியில் அதிக வரட்சி நிலவுகிறது. இதன் காரணமாக கால்நடைகளின் மேய்ச்சல் நிலங்களில் புற்கள் இல்லாமல் அழிவடைந்துள்ளன. இதனால் கால்நடைகளுக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நீர்நிலைகளில் தண்ணீர் வற்றியதனால் கால்நடைகளுக்கு குடிநீரும் கிடைப்பதில்லை.
பயிர்ச்செய்கை நிலங்கள் அதிக வெயில் காரணமாக அழிவடைந்துள்ளன. பயிர்களுக்கு இறைப்பதற்கு கிணறுகளிலும் தண்ணீர் இல்லை. இதனால் சில தோட்டங்கள் முற்றாக அழிந்துள்ளதுடன், சில தோட்டங்களில் உள்ள பயிர்கள் வாடுகின்றன.
குறிப்பாக கத்தரிக்கு தண்ணீர் பற்றாக்குறையால் மஞ்சள் நிறமாக காய்கள் மாறுகின்றன. இதனால் தரமான விளைச்சலை எம்மால் பெறமுடியவில்லை.
குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. ஒரு தொகுதி குடும்பங்கள் தூர இடங்களுக்கு சென்றே குடிநீரைப் பெற்றுக் கொள்கின்றனர். ஒரு தொகுதி குடும்பங்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பணம் கொடுத்து பெற்றுக் கொள்கின்றனர். இன்னும் ஒரு தொகுதி குடும்பங்கள் பிரதேச சபையினர் வழங்கும் குடிநீரைப் பெற்றுக் கொள்கின்றனர். பிரதேச சபையினரால் பணம் பெறப்பட்டே குடிநீர் வழங்கப்படுகிறது. அதுவும் ஒன்றவிட்டு ஒரு நாளைக்கு தான் குடிநீர் வழங்கப்படுகிறது. சில நேரங்களில் இரண்டு, மூன்று நாட்களுக்கு பின்னரும் தண்ணீர் வழங்கப்படுகிறது.
இந்த வரட்சி காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நோய் தாக்கங்களுக்கு உள்ளாகின்றனர்.
ஒரு ஆர்ப்பாட்டம் என்றவுடன் தகவல்களை திரட்டி கொழும்பிற்கு அனுப்புகின்ற புலனாய்வாளர்கள், இப்படியான மக்களது பிரச்சினைகள் குறித்தும் தகவல்களை திரட்டி அனுப்ப வேண்டும். இவ்வாறு அனுப்புகின்ற தகவல்களை அரசாங்கம் மற்றும் உரிய அதிகாரிகள் ஆய்வு செய்து மக்களுக்கு தேவையானவற்றை, அதாவது நிவாரணங்களையும் இழப்பீடுகளையும் வழங்க வேண்டும் – என்றனர்.