பு.கஜிந்தன்
முறைகேடுகளுடன் தொடர்புடையவர்களை ஆளுநர் பாதுகாப்பதன் பின்னணி என்ன? –
ஆசிரியர் சங்கம் ஆளுநரிடம் கேள்வி
முல்லைத்தீவு, கிளிநொச்சி வலயக்கல்வி பணிப்பாளர்கள் மீது முறைகேடுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யாது பாதுகாப்பதன் பின்னணி என்ன என்பதை வட மாகாண ஆளுநர் எமக்கு தெளிவுபடுத்த வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் வட மாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி, முல்லைத்தீவு வலயங்களில் ஆசிரியர்கள் துன்புறுத்தப்படு வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவு, கிளிநொச்சிக்கு செல்லும் ஆசிரியர்களில் சிலரை பழிவாங்கும் நோக்குடன் அங்கிருந்து தூர இடங்களுக்கு இடமாற்றும் செயற்பாடுகள் இடம்பெறுகின்றது.
ஆனால் அதே மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் தமது வீட்டு அருகாமையில் உள்ள பாடசாலைகளில் தொடர்ந்தும் பணியாற்றுகின்றனர்.
அண்மையில் கொழும்பில் ஒரு கலந்துரையாடலுக்காக சென்ற வடக்கு வலயக்கல்விப் பணிப்பாளர்களில் இருவர் இரத்மலானை அரச விடுதியில் மதுபோதையில் அட்டகாசம் புரிந்து அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தார்கள்.
ஆனால் முறைப்பாடு செய்யப்பட்டு, விசாரணைகள் இடம்பெற்ற நிலையில் அவர்களுக்குரிய ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படாமல் அவர்களைப் பாதுகாப்பது யார்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு வலய கல்விப் பணிப்பாளர்களின் பல முறைகேடுகள் தொடர்பில் ஆதாரங்களுடன் முன்வைக்கப்பட்டும் ஆளுநர் நடவடிக்கை எடுக்காமல் பாதுகாப்பதன் அரசியல் பின்னணி என்ன.
நாம் ஆளுநரிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறோம் ஊழல்வாதிகள் முறைகேடுகளுடன் தொடர்புடையவர்களை வடக்கு கல்வியில் நீங்கள் பாதுகாப்பதன் பின்னணி என்ன?
முல்லைத்தீவு வலயத்தில் இருந்து யாழ்பாண யூனியன் கல்லூரிக்கு ஆசிரியர் ஒருவரை நிரந்தரமாக இடமாற்றம் வழங்குமாறு ஆளுநர் கடிதம் அனுப்பியுள்ளதாக அறிகிறோம்.
ஆளுநரிடம் நாம் ஒன்றைக் கேட்க விரும்புகிறோம் 2007 ( 20) இடமாற்ற சபை தீர்மானம் என்று அதிபரின் நெருங்கிய உறவினருக்காக ஆளுநர் இடமாற்றச் சபைக்கு தெரியாமல் இடமாற்றம் வழங்க முடியுமானால் இடமாற்றச் சபை எதற்கு?
ஏழு வருடங்கள் ஒரே பாடசாலையில் கற்பித்தவர்களுக்கான இடம் மாற்றம் வழங்கப்பட்ட நிலையில் வலிகாம வலயத்தில் உள்ள மகாஜன கல்லூரியில் இடமாற்றம் வழங்கப்பட்ட இரு ஆசிரியர்களின் இடமாற்றத்தை ஆளுநர் நிறுத்தியதன் பின்னணி என்ன.
அதேபோல் அதிபர் சேவை தரம் மூன்றில் பலர் இருக்கும் நிலையில், தெல்லிப்பழை மகாஜன கல்லூரியில் ஆசிரியர் சேவையில் உள்ள ஒருவரை பிரதி அதிபராக வைத்திருப்பதன் பின்னணி என்ன.
வடக்கு ஆளுநர் இலங்கை கல்வி அமைச்சின் 2000 (4) பெற்று அதில் அதிபர் நியமனம் தொடர்பில் அவ்வாறான நடைமுறைகள் இருக்கிறது என்பதை பார்த்து செயல்படுத்த வேண்டும்.
வடக்கு ஆளுநர் அரசியல் பின்னணியில் இட மாற்றங்களை தடுத்தும் அதிபர் வெற்றிடங்களுக்கான அதிபர்கள் இருந்தும் ஆசிரியர்களை அதிபர்களாக வைத்திருப்பதன் மூலம் வடக்கு கல்விப் புலத்தின் ஆசிரியர் வளப் பங்கீட்டைக் குழப்ப பார்க்கிறார்.
ஆகவே வடக்கு கல்வியில் ஊழல்வாதிகள் முறைகேடுகளுடன் தொடர்பு உள்ளவர்களை தொடர்ந்தும் பாதுகாக்க வேண்டாம் என்பதோடு எம்மால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் ஆளுநர் உரிய பதிலை வழங்குவார் என எதிர்பார்க்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.