யாழ்ப்பாணம் வலிகாம கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவன் மீது ஆசிரியர் தாக்கியதில் மாணவனின் முகநரம்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு பாதிக்கப்பட்ட மாணவன் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் முகநரம்பில் பாதிப்பு ஏற்பட்டமையும் தெரியவந்தது.
இந்நிலையில் இரு தரப்பினரையும் அழைத்த மானிப்பாய் பொலிசார் மாணவன் பாதிக்கப்பட்டமை தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கையை பின்பற்றாமல் சமரசம் செய்து அனுப்பியுள்ளனர்.
மாணவன் தாக்கப்பட்டமை இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாக கூறப்பட்டாலும் பாடசாலையுடன் இணைந்து மாணவனின் பெற்றோரை சமரசம் செய்து அனுப்பியமை ஒரு தரப்பினரை காப்பாற்றும் நோக்கில் செயற்பட்டார்களா என எண்ணத் தோன்றுகின்றது.
குறித்த விடயம் தொடர்பில் வலிகாம வலயக் கல்விப்பணிப்பாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது பொலிசார் சமரசம் செய்தமையை அவர் உறுதிப்படுத்தினார்.