பு.கஜிந்தன்
சுழிபுரம் பறாளை முருகன் கோயிலின் தல விருட்சமான அரச மரத்தின் ஆயுட்காலத்தை தீர்மானிக்க விஞ்ஞான ரீதியிலான ஆராய்ச்சி செய்து முறையற்ற விதமாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெற நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடம் வாக்குறுதி அளித்துள்ளார்.
அத்துடன் விஞ்ஞானபூர்வமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளாமல் எப்படி வர்த்தகமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது என தொல்லியல் திணைக்களத்திடம் விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
இன்று நாடாளுமன்ற வளாகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளின் தலைவர்களான த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பறாளை முருகன் கோவில் விடயமாக பேச்சு நடத்தினார்கள்.
இன்று இந்த விவகாரம் பற்றி இருவரும் தனது கவனத்திற்கு கொண்டு வருவதற்கு முன்னர் இப்படி ஒரு பிரச்சனை நீடிப்பது தனது கவனத்திற்கு யாராலும் கொண்டுவரப்படவில்லை என ரணில் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
பறாளை முருகன் கோவிலில் வரலாறு சுமார் 300 ஆண்டுகளுக்கு உட்பட்டது என குறிப்பிட்டு சம்பவத்தின் பின்னணியையும் வரலாற்று சுருக்கத்தையும் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் விளக்கமளித்தார்.
இந்த விவகாரத்தில் 2 உண்மைகளில் ஒன்றை ஏற்றுக்கொள்ள வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் குறிப்பிட்டனர்.
ஒன்று இந்த மரம் 300 வருடங்கள் பழமையானது என்பதால் சங்கமித்தை இலங்கைக்கு 300 வருடங்களின் முன்னரே வந்தார். பௌத்தம் 300 வருடங்கள் மாத்திரமே பழமையானது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது இந்த மரம் சங்கமித்தை நாட்டிய மரமல்ல என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டனர்.
பறாளை முருகன் கோவிலின் தல விருட்சமான அரசமரம் சங்கமித்தை நாட்டிய மரமாக இருக்காது என்பது தனது அபிப்பிராயம் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, போர்த்துக்கேயர் இலங்கையை ஆண்டபோது நாட்டியிருந்த அரச மரங்களை எல்லாம் அழித்து விட்டதாக தெரிவித்தார்.
மரத்தின் ஆயுட்காலத்தை அளவிடும் பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னரா வர்த்தமானி வெளியிடப்பட்டது என கூட்டமைப்பினர் கேள்வி எழுப்பினர். அப்படியான பரிசோதனை எதுவும் மேற்கொள்ளாமல் அது சங்கமித்தை நாட்டிய மரம் என்ற முடிவுக்கு எப்படி தொல்லியல் திணைக்களம் வந்தது எனவும் கூட்டமைப்பினர் கேள்வி எழுப்பினர். இதன் மூலம் அந்த வர்த்தமானி இனவாத நோக்கமுடைய சட்டபூர்வமற்ற வர்த்தமானி என்பது புலப்படுகிறது என்பதையும் சுட்டிக்காட்டினர்.
இதனை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி தொல்லியல் திணைக்களம் எந்த விஞ்ஞானபூர்வ நடைமுறைகளையும் கடைப்பிடிக்காமல் எப்படி வர்த்தமானி வெளியிட்டார்கள் என்பது தொடர்பில் உடனடி விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க தனது செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
உடனடியாக வர்த்தமானியை மீளப் பெறுவது தென்னிலங்கை தரப்பில் எதிர்ப்பை ஏற்படுத்தி தனக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் உடனடியாக மரத்தின் ஆயுட்காலத்தை கண்டறியும் பரிசோதனை நடத்தி வர்த்தமானியை மீளப்பெற நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதி அளித்துள்ளதாக சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார்.