– நடராசா லோகதயாளன்
மிகவும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கையில், அரச நிதி எப்படியெல்லாம் விரயமாகிறது என்பது பற்றிய செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
அரசியல்வாதிகளின் ஊழல்கள், அரச நிறுவனங்களின் மோசமான நிதி மேலாண்மை, வெள்ளையானை போன்ற அளவுக்கு மீறிய இராணுவம் என்று பல வழிகளில் அரச வளங்கள் வீணடிக்கப்படுவதாக பொருளாதார வல்லுநர்கள் கவலைப்படுகின்றனர்.
அனைத்து துறைகளிலும் உள்ள ஓட்டைகளை இலங்கை அரசு விரைவில் அடைத்து, அரச நிதி விரயமாவதை தடுக்கவில்லை என்றால், நாடு மேலும் மோசமான நிலைக்குச் சென்று, அதிலிருந்து மீள முடியாத நிலை ஏற்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
அவ்வகையில் வவுனியாவில் எப்படி அரச வளங்கள் வீணடிக்கப்படுகின்ற என்பது தொடர்பிலான செய்தி ஒன்று இப்போது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் இயங்காத பொருளாதார மத்திய நிலையத்திற்கு 5 ஆண்டுகளாக பாதுகாப்புக் கட்டணம் மற்றும் சுத்திகரிப்புக் கட்டணமாக 58 லட்சத்து 65 ஆயிரத்து 128 ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது.
அந்த மாவட்டத்தில் நீண்ட சர்ச்சையின் மத்தியில் 2018ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் இன்றுவரை பாவனையின்றி உள்ளது. இவ்வாறு பாவனையின்றிக் காணப்படும் மத்திய நிலையமானது 29 கோடியே 16 லட்சத்து 39 ஆயிரத்து 356 ரூபாவில் அமைக்கப்பட்டது.
இவ்வாறு அமைக்கப்பட்ட கட்டிடம் இன்றுவரை பாவனையின்றி காணப்படுவதோடு அதற்காக 2018 முதல் 2022 வரையான காலப்பகுதியிலேயே மேற்படு தொகை பாதுகாப்பு, சுத்திகரிப்பு மற்றும் நீர்க் கட்டணமாக செலுத்தப்பட்டுள்ளது.
கட்டுப்பாடற்ற வகையில் செய்யப்படும் இப்படியான செலவினங்களை ஏன் அரசு தடுக்கவில்லை என்ற கேள்விக்கு பதிலளிக்க யாரும் தயாராக இல்லை. இப்படி பல உதாரணங்களை காண முடிகிறது;
அந்த வகையில் மேலும் ஒரு சம்பவமாக வவுனியா மாவட்டத்தில் உத்தியோகத்தராக இருக்கும்போது வழங்கிய அரச விடுதியை ஓய்வு பெற்று 25 மாதங்கள் கடந்தும் மீள ஒப்படைக்கவில்லையென கணக்காய்வில் கண்டுகொள்ளப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டச் செயலகத்தின் திட்டமிடல் கிளையில் கடமையாற்றி 2021ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி ஓய்வு பெற்றுச் சென்ற ஒருவர் 2023ஆம. ஆண்டிற்கான கணக்காய்வுக் காலம் வரையில் இல்லங்களை ஒதுக்கிக் கொடுக்கும் அதிகாரிக்கு அறிவித்தல் வழங்காததோடு 22 மாதங்களிற்கு மேலான வாடகை நிலுவையினையும் செலுத்தவில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு செலுத்த வேண்டிய நிலுவையாக ஒரு லட்சத்து 32 ஆயிரம் ரூபா செலுத்தாமை தொடர்பிலும் மாவட்டச் செயலகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தேசிய கணக்காய்வு அலுவலகம் அறிக்கையிட்டுள்ளது.
சிறு துளி பெருவெள்ளம் என்பது போன்று, இலங்கையில் கணக்கில் வராமலும், கணக்கு காட்டாமலும் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக பல பில்லியன் ரூபா காணாமல் போயுள்ளது என்பது உண்மை. இதுவரை எந்த ஆணைக்குழுவோ அல்லது அரசால் அமைக்கப்பட்ட வேறு விசாரணைக் குழுவோ, அரச வளங்கள் மற்றும் நிதி ஆதாரங்கள் கண்ணுக்கு தெரிந்தும் தெரியாமலும் பல வகைகளில் விரயமாவதை ஏன் தடுக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது.
அது மாத்திரமின்றி இப்படியான ஊழல்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் பார்வைக்கு வரவில்லை என்ற வினாவும் மக்களால் கேட்கப்படுகிறது.
உலக வங்கி மட்டுமல்ல, உலகில் உள்ள எல்லா வங்கிகளும் கடனாகவும், உதவியாகவும் எவ்வளவு தான் அள்ளிக் கொடுத்தாலும், இந்த ஓட்டைகள் அடைக்கப்டாத வரை அரசின் நிதிச்சுமை குறையாது என்பதே யதார்த்தமாக உள்ளது.