பு.கஜிந்தன்
ஓவியர் ஆசை இராசையா நினைவாக கலைநிகழ்வுகளும், கண்காட்சியும் ஓவியர் ஆசை இராசையாவின் 77ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு ‘பிரம்மம்’ என்ற தலைப்பிலான நினைவுகூரல் நிகழ்வு மற்றும் ஓவியக் கண்காட்சி என்பன எதிர்வரும் 19ஆம் திகதி சனிக்கிழமை மறுநாள் 20. ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நடைபெறவுள்ளது.
ஓவியர்களையும் ஓவியக் கலையையும் கொண்டாடும் விழாவாக இந்தநிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சனிக்கிழமை காலை 9 மணிக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக நுண்கலைத்துறைப் பேராசிரியர் தா. சனாதனன் தலைமையில் நடைபெறும் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம விருந்தினராக கொழும்பு கட்புலக் கலைகள் மற்றும் நிகழ்த்து கலைகள் பல்கலைக்கழகப் பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
பேராசிரியர் சரத்சந்திரஜீவாவால் வடிவமைக்கப்பட்ட ஓவியர் ஆசை இராசையாவின் உருவச்சிலையும் வைபவரீதியாக கையளிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படவுள்ளது.
கவிஞர் சோ. பத்மநாதன், விரிவுரையாளர் ஓவியர் பி. பிரசாந், ஆகியோரும் நிகழ்வில் வெவ்வேறு கருப்பொருளில் உரையாற்றவுள்ளனர்.
சிரேஷ்ட விரிவுரையாளர் சி. ரமணராஜா நினைவுப் பேருரையியை ஆற்றவுள்ளார். ஓவியர் ஆசை இராசையாவின் வாழ்க்கையை மையப்படுத்திய நடன ஆற்றுகை ஆசிரியர் எஸ். சிறீகண்ணனின் நெறியாள்கையில் நடைபெறவுள்ளது. அத்துடன், காயத்ரியின் நெறியாள்கையில் அவருடன் இணைந்து ராகவி பங்குபெறும் பரதம் மற்றும் யோகாவின் தெய்வீக இணைப்பு என்ற ஆற்றுகையும் நடைபெறவுள்ளன.
இதனைத் தொடர்ந்து கண்காட்சி நடைபெறும். சித்திர பாடத்தைப் பயிலும் மாணவர்களுக்கு இந்நிகழ்வு பெரிதும் உதவும் வகையில் இந்தக் கண்காட்சி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.