உலக உணவுத் திட்டமானது கிளிநொச்சி மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்பை ஊக்குவிக்கும் நோக்கில், கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் போஷாக்கு உலருணவு நிகழ்ச்சித் திட்டத்தினை நடைமுறைப்படுத்தியுள்ளது.
அதனடிப்படையில், குறித்த திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம்(29) கரைச்சி தெற்கு பலநோக்குக் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் காலை 10.00 மணிக்கு இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன், உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதி பணிப்பாளர் ஜெராட் ரொபெல்லோ, உலக உணவுத் திட்ட அரச இணைப்பாளர் முஸ்தபா நியமத் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு குறித்த திட்டத்தினை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.
திட்டத்திற்காக கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் 7,022 பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இரண்டு மாத காலப்பகுதிக்கான 24 கிலோக்கிராம் அரிசி, 20 கிலோக்கிராம் கடலைப் பருப்பு, 5 லீட்டர் தேங்காய் எண்ணெய் ஆகியன வழங்கப்படவுள்ளன.
குறித்த உலருணவு விநியோகம் அக்கராயன், கரைச்சி கிழக்கு, கரைச்சி தெற்கு ஆகிய பல நோக்குக் கூட்டுறவு சங்கங்களின் ஊடாக இடம்பெறவுள்ளது.
இத் திட்டத்தின் கீழ் கரைச்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள், நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், குறைந்த பொருளாதார வசதியுடைய குடும்பங்கள் என்ற வகைகளில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கே இந் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் உலருணவுப் பொதிகள் வழங்கப்படவுள்ளன.
இந் நிகழ்வில் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் கி.ஸ்ரீபாஸ்கரன், கரைச்சி பிரதேச செயலாளர் பா.ஜெயகரன், உலக உணவுத் திட்டத்தின் நிகழ்ச்சித் திட்ட உதவியாளர் கஜாணன், வேல்ட் விஷன் நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் யூட் நிசாந்தன், மாவட்ட செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் அ.கேதீஸ்வரன், கரைச்சி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ராஜ்வினோத், உலக உணவுத்திட்ட உத்தியோகத்தர்கள், கரைச்சி தெற்கு பலநோக்குக் கூட்டுறவு சங்க முகாமையாளர், கரைச்சி தெற்கு பலநோக்குக் கூட்டுறவு சங்க உத்தியோகத்தர்கள், பயனாளிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
உலக உணவுத் திட்டம் (World Food Programme) WFP என்பது ஐக்கிய நாடுகள் அவையின் ஒரு பிரிவு ஆகும். இது பட்டினியைப் போக்கவும், உணவுப் பாதுகாப்பை ஊக்குவிக்கவும் பாடுபடும் உலக அளவில் மிகப்பெரும் மனிதநேய அமைப்பாகும்.